காங், தமாகா, ததேமக, ததேமு, ததேக, அதிமுக.... இனியன் சம்பத்தின் அரசியல் அடையாளங்கள்
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் தம்பி இனியன் சம்பத் தம்முடைய தமிழ் தேசிய கட்சி(ச)யை கலைத்துவிட்டு அதிமுகவில் இன்று இணைந்துள்ளார்.
இனியன் சம்பத் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றியவர். 1989-ல் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், பின்னர் கட்சியின் மாநில செயலாளராகவும் அவர் பதவி வகித்தார்.

பின்னர் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்தார். தமாகா காங்கிரஸில் இணைந்த போது மீண்டும் காங்கிரஸுக்கு தாவினார்.
2011-ல் தமிழ் தேசிய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். பின்னர் தனது கட்சியை பழ. நெடுமாறனின் தமிழர் தேசிய முன்னணியுடன் இணைத்து அந்த முன்னணியின் பொதுச்செயலாளராக பதவி வகித்தார்.

தாம் தமிழ்த் தேசியம் பேசுபவர்; தாயார் மறைந்த சுலோச்சனா சம்பத் திராவிட தேசியம் பேசுகிறவர்; அண்ணன் இளங்கோவன் இந்திய தேசிய பேசுபவர் எனவும் இனியன் சம்பத் கூறிவந்தார்.
இந்த நிலையில் தமிழ்த் தேசிய முன்னணியில் இருந்து விலகி தமிழ்த் தேசிய கட்சி (சம்பத்) என்ற புதிய கட்சியை கடந்த ஆண்டு இனியன் சம்பத் தொடங்கினார்.
தற்போது இந்த கட்சியையும் கலைத்து விட்டு முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார் இனியன் சம்பத்.












Click it and Unblock the Notifications