இந்த ஆண்டும் புது ரேஷன் கார்டு கிடையாது- இணைப்புத் தாள் மட்டுமே ஒட்டப்படுமாம்!
மதுரை: தமிழக அரசிடமிருந்து இதுவரை தகவல் ஏதும் வராததால் அடுத்தாண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக மேலும் ஓராண்டுக்கு இணைப்புத்தாளை பயன்படுத்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்க உள்ளனர்.
தமிழகத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் உணவு வழங்கல் துறையின் மூலம் குடும்ப வருவாய்க்கு ஏற்ப 2005 ஆம் ஆண்டு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. இதன் ஆயுட்காலம் 2009 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. பயோ மெட்ரிக் ரேஷன் கார்டுக்காக 2010 இல் இணைப்புத்தாள் வழங்கப்பட்டது. 2012ல் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணி முடிவடைந்ததும், அதைக்கொண்டு பொதுமக்களின் விரல் ரேகை, விழிகள் பதிவு செய்து பயோ மெட்ரிக் கார்டாக 2013 இல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக ஓராண்டுக்குப் பயன்படுத்தும் வகையில் இணைப்புத்தாள் வழங்கப்பட்டது.
அந்த இணைப்புத்தாளும் 2014 ஆம் ஆண்டோடு முடிந்தது. 2015ல் பயோ மெட்ரிக் திட்டத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதுபோல் 3 முறை இணைப்புத்தாள் வழங்கப்பட்டு புதிய கார்டு வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. காரணம் போதிய நிதி இல்லாத காரணத்தால் இந்தத் திட்டத்தை தமிழக அரசு தள்ளிவைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ள இணைப்புத் தாளை இரண்டு ஆண்டுக்குப் பயன்படுத்தலாம்.
வரும் 2016ம் ஆண்டுக்கும் இதே இணைப்புத்தாளை பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வரும் ஆண்டில் புதிய கார்டு வழங்குவது கேள்விக்குறியாகி விட்டது. மதுரை மாவட்டத்தில் 9.70 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் 6 ஆயிரம் கார்டுகள் எப்பொருளும் வேண்டாம் எனக் கூறும் "N" கார்டு ஆகும். எஞ்சியுள்ள கார்டுகள் இணைப்புத்தாளைப் பயன்படுத்த வேண்டும்.
இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவா கூறுகையில், "புதிய கார்டு வழங்குவது குறித்து அரசிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. அடுத்த ஆண்டிற்குப் பொருட்கள் வழங்க ஏற்கெனவே உள்ள இணைப்புத்தாளில் அதற்கான இடம் வசதி உள்ளது. எனவே, அதனையே அடுத்த ஆண்டிற்கும் பயன்படுத்த வேண்டும். இது தொடர்பாக ரேஷன் கடை விற்பனையாளர்களுக்குத் தகவல் தெரிவிக்க உள்ளோம்,"என்றார்.