பேராசிரியரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த இன்ஸ்பெக்டர் கைது
சென்னை: டாக்டர் சீட் வாங்கித் தருவதாக கூறி சிதம்பரம் பேராசிரியரிடம் 20 லட்ச ரூபாய் மோசடி செய்த சென்னை இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர் அன்புமலர். பேராசிரியரான இவரிடம் டாக்டர் சீட் வாங்கித் தருவதாக கூறி, சென்னை தசரதபுரத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் சித்தராமைய்யா 20 லட்ச ரூபாய் வாங்கியுள்ளார்.
ஆனால், கூறியபடி சித்தராமைய்யா டாக்டர் சீட் வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால், ரூ.20 லட்சத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார் அன்புமலர். ஆனால், பணம் கொடுக்காமல் சித்தராமைய்யா ஏமாற்றி வந்துள்ளார்.
இதையடுத்து, பேராசிரியர் அன்புமலர் கடலூர் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சென்னை வந்து இன்ஸ்பெக்டர் சித்தராமைய்யாவை இன்று கைது செய்தனர்.
மோசடி வழக்கில் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.