ஜெயலலிதா, மமதா, சங்மா, கலாம்.. 2012 ஜனாதிபதி தேர்தலில் நடந்தேறிய விசித்திரங்கள்- ப்ளாஷ்பேக்!
சென்னை: 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் ஏகப்பட்ட விநோதங்களுடன் சுவாரசியமானதாக இருந்தது.
காங்கிரஸ் கட்சி நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியை அதிரடியாக வேட்பாளார் என அறிவித்தது. அப்போது அதிரடியாக ஜெயலலிதா, லோக்சபா முன்னாள் சபாநாயகர் சங்மாவை வேட்பாளராக முன்னிறுத்தினார். அவருக்கு பிஜூ ஜனதா தளம் முதலில் ஆதரவு தெரிவித்தது.

கலாமுக்கு வாய்ப்பு
அதேநேரத்தில் மமதா பானர்ஜி, பிரணாப் முகர்ஜியை ஏற்க முடியாது; அப்துல் கலாமையே வேட்பாளராக நிறுத்தலாம் என்றார். ஆனால் திமுகவோ காங்கிரஸின் பிரணாப்பையும் அதிமுகவோ சங்மாவையும்தான் ஆதரித்தன.

கலாமை கைவிட்ட தமிழக கட்சிகள்
தமிழகத்து அப்துல் கலாம் ஜனாதிபதியாவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு தரவில்லை. இதனால் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டிடப் போவதில்லை என அறிவித்தார் கலாம்.

சோம்நாத் சட்டர்ஜி
மமதா பானர்ஜி ஒரு கட்டத்தில் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியை வேட்பாளராக்கலாம் என கூறினார். இந்த சோம்நாத் சட்டர்ஜியை வீழ்த்திவிட்டுதான் 1984-ல் எம்.பியானவர் மமதா பானர்ஜி. இன்னொரு விசித்திரம் சோம்நாத் சட்டர்ஜியை அவர் 40 ஆண்டுகாலம் உழைத்த சிபிஎம் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்தது.

சென்னை வந்த அத்வானி
அப்போது சென்னைக்கு நேரில் வந்து ஜெயலலிதாவிடம் தாங்கள் முன்நிறுத்த போகும் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டார் அத்வானி. ஆனால் ஜெயலலிதாவோ சங்மாவையே பாஜக ஆதரிக்க வேண்டும் என அத்வானியிடம் வலியுறுத்தினார்.

சங்மாவை ஆதரித்த பாஜக
கடைசிவரையில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக சிவசேனாவும் ஐக்கிய ஜனதா தளமும் அறிவித்தன. இதனால் பாஜக, ஜெயலலிதா முன்னிறுத்திய சங்மாவுக்கு ஆதரவு தெரிவித்தது. அதேபோல் முரண்டுபிடித்த மமதா பானர்ஜி கடைசியில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவளித்தார்.

வென்ற பிரணாப்
காங்கிரஸின் பிரணாப் முகர்ஜி அமோக வெற்றி பெற்று நாட்டின் 13-வது ஜனாதிபதியானார். அப்துல் கலாம் 2015-ல் காலமானார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் சங்மாவும், டிசம்பரில் ஜெயலலிதாவும் காலமாகினர்.












Click it and Unblock the Notifications