தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு... சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 4 மாதங்களாக தென்னிந்தியா உட்பட நாடு முழுவதும் பரவலாக வெளுத்து வாங்கிய தென்மேற்கு பருவமழை நாளையுடன் நிறைவடைய உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
[நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. தாக்குதலில் மீனவர்கள் பலத்த காயம்!]
தென்மேற்கு பருவமழை நிறைவடையும் அதே நாளில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது. பொதுவாக வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு அதிக மழை பொழிவை தரும் என்பதால் வடகிழக்கு பருவமழை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வளிமண்டல தாழ்வு நிலை
இந்நிலையில் அரபிக்கடல் முதல் இலங்கை வரை கேரளா மற்றும் தமிழகம் வழியாக வளி மண்டலத்தில் மேலடுக்கு தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிதமான மழை
தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
உள் தமிழகத்தில் கனமழை
வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் உள் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.
இரவில் மழை பெய்யும்
மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மையம் கூறியுள்ளது.