மொழிகளில் சிறந்ததெந்தன் “தாய்மொழி” – இன்று உலக தாய்மொழி தினம்!
சென்னை: இன்று உலக தாய்மொழிகள் தினம்... வாழ்க்கையின் ஓட்டத்தில் பல்வேறு ஊர்கள் சென்று பல மொழிகள் பேசினாலும் ஒவ்வொருவருக்கும் அவரவர் பிறப்பிடத்தின் தாய்மொழியாக ஒன்று கண்டிப்பாக இருக்கும்.
ஒருவருக்கு ஒருவர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி பின்னாளில் இனத்தின் அடையாளமாக மாறியது.
உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு மாநிலத்துக்கு மாநிலம் சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது.
6200 மொழிகள்:
உலகில் பேசப்படும் மொழிகள் பொது மொழி தாய்மொழி என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 100 ஆண்டுகளுக்கு முன் 6200 ஆக இருந்த மொழிகள் இன்று 3000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக தாய்மொழி தினம்:
இந்தியாவில் இந்தி தமிழ் தெலுங்கு உள்ளிட்ட 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும் ஒற்றுமையை வளர்க்கவும் ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ஆம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் உருது மொழி:
இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின் பாகிஸ்தானில் "உருது மொழி" அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. 1952 ஆம் ஆண்டு அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் அதாவது தற்போதைய வங்கதேசத்தில் உருது மொழிக்குப் பதிலாக வங்க மொழியை அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் கோரிக்கை தெரிவித்தனர்.
மாணவர்களின் நினைவு தினம்:
கடந்த 1952 பிப்ரவரி 21 ஆம் தேதி பாகிஸ்தான் அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி டாகா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நான்கு மாணவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக யுனெஸ்கோ அமைப்பு 1999 ஆம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது.
வாழ்க்கைக்கு துணை:
தாய்மொழி, தேசிய மொழி, மற்றும் தொடர்பு மொழி என பொதுவாக மூன்று விதமான மொழிகள் ஒருவருக்கு தெரிந்திருந்தால் எங்கு வேண்டுமானாலும் வாழ்வதற்கு துணையாக இருக்கும் என அறிஞர்கள் கூறுவர்.
உலக மக்களின் மொழி:
ஆனால் தொடர்புகளுக்காக உருவான மொழியின் பெயரால் இனவாதம் துவங்கியது துரதிஷ்டமானது. உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும், உரிய மரியாதையும் அளிக்க வேண்டும்.
மொழிகளை அழிக்காதீர்கள்:
எந்த மொழியையும் அழிக்கக் கூடாது."ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும், வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும், மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்கவும்" இத்தினம் வலியுறுத்துகிறது.
எத்தனை மொழிகள்:
இந்தியா பல மொழிகள் பேசும் நாடு. இதில் 74 சதவீத மக்கள் இந்திய ஐரோப்பிய மொழிகளையும் 23 சதவீத மக்கள் தமிழை உள்ளடக்கிய திராவிட மொழியையும் பேசுகின்றனர். இருப்பினும் இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.