செஸ் ஒலிம்பியாட் போட்டி.. சர்வதேச தரத்தில் தயாராகும் அரங்குகள்.. 90% பணிகள் நிறைவு!
செங்கல்பட்டு: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சர்வதேச தரத்தினாலான அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. வரும் ஜூலை 28ம் முதல் ஆகஸ்டு 10 வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் பங்கேற்கவுள்ளனர்.

தமிழக அரசு ஏற்பாடு
இதில் 189 அணிகள் பொதுப் பிரிவு போட்டிகளிலும், 154 அணிகள் மகளிர் பிரிவிலும் கலந்துகொள்கின்றனர். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் உலகம் முழுவதிலும் இருந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தமிழக அரசு சார்பாக தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அமைச்சர் ஆய்வு
இதன் தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள், விளையாட்டுத்துறை அமைச்சர்கள் கொண்ட குழு டெல்லி செல்கிறது. அதற்கு முன்னதாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

சர்வதேச தரத்தில் அரங்குகள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள ஒலிம்பியாட் போட்டிக்கான நடைபெற்று வரும் பணிகள் 90 சதவீதம் அளவிற்கு நிறை பெற்றுள்ளது. இதற்காக இரண்டு அரங்கங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. சுமார் 52 ஆயிரம் சதுர அடி பரப்பில் சர்வதேச தரத்திலான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஒரே நேரத்தில் 700 பேர் விளையாடலாம்
இந்த அரங்கில் 128 மேஜைகள் அமைக்கப்பட்டு, 128 அணிகள் போட்டியிடும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உள்ள அரங்கில் 49 மேஜைகள் அமைக்கப்பட்டு 49 அணிகள் விளையாடும் அளவிற்கு அமைக்கப்பட்டுளது. ஒரே நாளில் 700 விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்று விளையாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அரசு விளம்பரப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதனால் நாளுக்கு நாள் செஸ் ஒலிம்பியாட் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications