ஆர்.கே.நகரில் அதகளம்... 4 தினகரன்; 3 மதுசூதனன்கள் வேட்புமனுத் தாக்கல்; 29 பேர் தொப்பிக்கு ’அடம்’
ஆர்கே நகரில் 4 தினகரன்கள், 3 மதுசூதனன்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் என்ற பெயரிலேயே 4 பேரும் மதுசூதன் என்ற பெயரில் 3 பேரும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். மேலும் தொப்பி சின்னம்தான் வேண்டும் என 29 பேர் அடம்பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் தேர்தல் களம் என்பது பணமழை கொட்டும் களத்து மேடாகிவிட்டது. அதுவும் இடைத்தேர்தல்களை சொல்ல வேண்டியதே இல்லை.
பிரதான வேட்பாளர்களின் பெயர்களைக் கொண்டவர்கள், முக்கிய வேட்பாளர்கள் கேட்க இருக்கும் சின்னத்தை கேட்டு அடம்பிடிப்பவர்கள் என ஒரு பட்டாளமே களம் இறக்கப்படும். பின்னர் உரிய கவனிப்புக்குப் பின்னர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டு கல்லாகட்டிய கையோடு நடையைக் கட்டிவிடுவார்கள்.
இதுதான் தற்போது ஆர்.கே. நகரிலும் களை கட்டி இருக்கிறது. ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தவர்களில் 4 தினகரன்கள், 3 மதுசூதனன்கள் இருக்கிறார்கள்.
அதேபோல் தினகரன் டெல்லி வரை சென்று அடம்பிடித்துக் கொண்டிருக்கும் தொப்பு சின்னத்தை 29 பேர் கேட்டு கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே தொப்பி சின்னத்தை கேட்கும் சுயேட்சைகளுக்கான ரேட்டை தினகரன் தரப்பு பிக்ஸும் செய்து வைத்திருக்கிறதாம். இதனால் தினகரன்களும் மதுசூதனன்களும் தொப்பி சின்னம் கேட்ப்போரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.