“கறை படிந்த வருமானம்’’ அரசுக்குத் தேவையா? சூதாட்ட ஐபிஎல் போட்டியை தடை செய்க: கி.வீரமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடும் வறட்சிக் காலத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டா? மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது சூதாட்ட ஐ.பி.எல். கிரிக்கெட்டைத் தடை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மகாராஷ்டிரத்தில் கடும் வறட்சி நிலவுகிறது; பருவ மழை பொய்த்தது; பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்பு, குளோபல் வாமிங் (Global Warming) எனும் தட்பவெட்பப் பாதிப்பு இவையே காரணங்களாகும்.

 IPL matches to be banned: K. Veeramani

மக்கள் குடிநீருக்கே மக்கள் அவதியுறுகிறார்கள் - பணம் கொடுத்து குடிநீரை வாங்கிப் பருகும் பரிதாப நிலை உள்ளது!

இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் பந்தயம் என்ற கிரிக்கெட் (சூதாட்டம்) விளையாட்டுகள் அங்கே ஏற்பாடு செய்ததின் மூலம், நாள் ஒன்றுக்கு கிரிக்கெட் விளையாட்டுக் களத்தின் புல் தரைமீது தண்ணீர் தெளிப்பதில் 60 லட்சம் லிட்டர் தண்ணீர் (மொத்தமாக) செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழில் ஒரு பழமொழியை கிராமங்களில் சொல்வார்கள்; "குடிக்கக் கூழ் இல்லை; கொப்பளிப்பதற்குப் பன்னீர்!'' என்று. அதை நினைவூட்டுவதாக உள்ளது - இந்த தனி முதலாளிகளின் அடிமை வியாபாரம். (மனிதர்கள் தங்களைத் தாங்களே விற்றுக் கொள்ளுவது இல்லாத நாட்டில், கிரிக்கெட் என்ற இந்த சூதாட்ட விளையாட்டு வீரர்கள், விலைக்குத் தங்களை விற்றுக் கொள்ளும் வெட்கப்படவேண்டிய வியாபாரம் நடைபெறுகிறது).

கோடிக்கணக்கில் குவியும் கொள்ளை லாபம்!

ஏலம் எடுக்கும் முதலாளிகளின் அணிகள் கோடிக்கணக்கில் கொள்ளை லாபத்தைக் குவிக்கின்றனர். கிரிக்கெட் ஐ.பி.எல். விளையாட்டுப் போட்டி என்பது தனி மனிதர்களின் வாணிபம்; பொது மக்களுக்கு இதனால் காதொடிந்த ஊசி அளவிற்குக்கூட லாபம் ஏதும் கிடையாது! அரசுக்கு வரிமூலம் வருமானம் என்ற ஒரு நொண்டிச் சமாதானம் கூறப்படுகிறது. மக்கள் நல்வாழ்வை அடகு வைக்கும்,
இந்தக் "கறை படிந்த வருமானம்'' அரசுக்குத் தேவையா?

உயர்நீதிமன்றத்தின் சிறந்த தீர்ப்பு!

"குடிக்க நீரின்றிச் சாகும் மக்கள் அவதியுறும் சமயத்தில், இப்படி ஒரு விளையாட்டா?'' என்று நீதி கேட்டு ஒருவர் போட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்று, மும்பை உயர்நீதிமன்றம் தந்த நல்லதோர் தீர்ப்பு! அய்.பி.எல். கிரிக்கெட் விளையாட்டு மகாராஷ்டிர மாநிலத்தில் எங்கும் நடைபெறக்கூடாது; வேண்டுமானால், வேறு மாநிலத்தில் எங்காவது நடத்திக் கொள்ளலாம் என்பது அரிய தீர்ப்பாகும்.

"மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு'' ஆங்கில ஏடு இத்தீர்ப்பின்மீது தனது சாபத்தை ஏவிவிட்டுள்ளது. இவர்களுக்கெல்லாம் எவ்வளவு மக்கள் நலம் பார்த்தீர்களா? பாதுகாக்கப்பட வேண்டியது மக்கள் உயிரா? கிரிக்கெட்டா?

இது பாராட்டத்தக்க பொதுமக்கள் நலன் சார்ந்த நல்ல தீர்ப்பு ஆகும்!

வழக்குப் போட்டவர், தீர்ப்பளித்த நீதிபதிகள் அனைவருமே நமது பாராட்டிற்குரியவர்களே!

உழைப்புக்கு இடமில்லாத கிரிக்கெட் விளையாட்டு

பொதுவாக பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளை வருவாயாக - கொள்ளை லாபமாகப் பெறும் "கிரிக்கெட்'' என்ற உயர்மட்ட மேட்டுக்குடி மக்களின் விளையாட்டு - உடலுழைப்பிலும் குறைவானதேயாகும், கால் பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, சடுகுடு (கபடி) விளையாட்டுக்களோடு ஒப்பிடுகையில்!

ஐ.பி.எல். என்ற இந்த விளையாட்டினால், சூதாட்டமும் பெருகி, பொது ஒழுக்கச் சிதைவும் பரவலாக ஏற்பட்டுள்ளது!

ஐ.பி.எல். ஆட்டத்தைத் தடை செய்க!

ஐ.பி.எல். கிரிக்கெட்டை அரசுகள் தடை செய்யவேண்டும்; இதற்கென ஒரு தனி இயக்கமும் (Campaign) இந்தியா முழுவதும் நடத்தப்படல் வேண்டும். உச்சநீதிமன்றம் முன்வந்து இவைகளைத் தடை செய்ய முன்வருதல் மூலம் பொதுநலம், பொது ஒழுக்கம் காப்பற்றப்படக்கூடும். இவ்வாறு வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+