காதல் விவகாரம்-வருண்குமார் ஐ.பி.எஸ்சின் சஸ்பென்சனை ரத்து செய்த தீர்ப்பாயம்
சென்னை: திருமணச் சர்ச்சை வழக்கில் சிக்கிய ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமாரை பணி இடைநீக்கம் செய்து வெளியிடப்பட்ட அறிக்கையை ரத்து செய்து மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் வருண்குமார். இவர், கடந்த 2010 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர் ஐ.பி.எஸ் பயிற்சியை முடித்துவிட்டு 2013 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் ஏ.எஸ்.பி பணியில் சேர்ந்தார்.
இதற்கிடையில் வருண் குமார் ஏஎஸ்பிக்கான பயிற்சியில் இருந்தபோது அவர் மீது பிரியதர்ஷினி என்பவர் போலீசில் புகார் செய்தார்.

மிரட்டல் புகார்:
அந்த புகாரில் வருண்குமார் தன்னை காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததாகவும், பெருந்தொகை வரதட்சணையாக கேட்டதாகவும், தன்னை மிரட்டியதாகவும் கூறியிருந்தார்.

வரதட்சணைக் கொடுமை:
இந்த புகாரின் அடிப்படையில், வருண்குமார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடி, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சென்னை ஹைகோர்ட் வருண்குமாருக்கு முன்ஜாமீன் வழங்கியது.

15 நாள் நீதிமன்றக் காவல்:
இதை எதிர்த்து பிரியதர்ஷினி செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் வருண்குமாருக்கு ஹைகோர்ட் வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்தது. இதையடுத்து, சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் வருண்குமார் சரணடைந்தார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

90 நாட்களுக்கு நீட்டிப்பு:
இதை தொடர்ந்து வருண்குமாரை பணியிடை நீக்கம் செய்தார் தமிழக டி.ஜி.பி. கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த பணியிடை நீக்கம் உத்தரவு 90 நாட்களுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

பணி வழங்க கோரிக்கை:
இதையடுத்து, தமிழக டி.ஜி.பி.யிடம் வருண்குமார் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில், என் மீது புகார் கொடுத்த பிரியதர்ஷினி, ராகுல் பண்டாரி என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துக்கொண்டார். என் மீதான வழக்கில் இதுவரை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே என்னை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

ரத்து செய்து உத்தரவு:
இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், சென்னையில் உள்ள மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வருண்குமார் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் இளங்கோ, நிர்வாகப்பிரிவு உறுப்பினர் ராமானுஜம் ஆகியோர், வருண்குமாரை பணியிடை நீக்கம் செய்து தமிழக டி.ஜி.பி. பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications