ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
சென்னை: தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் இன்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, அமெரிக்காவுக்கு மேல்படிப்புக்காக விடுமுறையில் சென்று திரும்பிய கூடுதல் டி.ஜி.பி கந்தசாமி சென்னை தொழில்நுட்ப பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுகிறார்.
சென்னை தொழில் நுட்ப பிரிவு ஐ.ஜி. வினித் தேவ் வங்கடே இடமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர் சேவியர் தன்ராஜ் பணிமாற்றம் செய்யப்பட்டு சென்னை தெற்கு சரக ஊழல் தடுப்பு சூப்பிரண்டாக நியமிக்கப்படுகிறார்.
சென்னை தெற்கு சரக ஊழல் தடுப்பு சூப்பிரண்டாக இருந்த மகேஸ்வரி மாற்றப்பட்டு மேற்கு சரக சூப்பிரண்டாக கே.ஏ.செந்தில் வேலனுக்கு பதில், நியமிக்கப்படுகிறார்.
கோவை மாநகர போலீஸ் குற்றப்பிரிவு துணை கமிஷனர் கே.சுகுமாரன் மாற்றப்பட்டு பழனியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 14-வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆக நியமிக்கப்படுகிறார். அந்த பதவியில் இருந்த கே.பால்ராஜ் மாற்றப்பட்டு மதுரை தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 6-வது பட்டாலியன் கமாண்டன்ட் ஆக ரம்யா பாரதிக்கு பதில் நியமிக்கப்படுகிறார்.
திருநெல்வேலி நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை கமிஷனர் சாம்சன் திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.