எல்லாம் பொய்.. இந்த மேட்டர்களை ‘டைவர்ட்’ செய்ய பிளான்! அண்ணாமலை மீது குற்றம்சாட்டும் பத்திரிகையாளர்!
சென்னை : "அண்ணாமலை மீதான புகார் பட்டியல் பாஜக தலைமைக்குச் சென்றிருக்கிறது. அதை திசைதிருப்புவதற்காக இங்கு சில வேலைகளைச் செய்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது." என ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டு, பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். இது அரசியல் அரங்கில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை ஆதாரம் எதுவுமே இல்லாமல் பொய்யான அவதூறுகளைச் செய்வதாக திமுக தரப்பு தெரிவித்து வருகிறது.

பத்திரிகையாளர் ப்ரியன் பேட்டி : இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில், "அண்ணாமலை என்னிடம் வீடு இல்லை, கார் இல்லை எனச் சொல்கிறார். 9 ஆண்டு காலம் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் இப்படிச் சொன்னால் அதை யாராவது நம்ப முடியுமா? 2021 தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டபோது தனது சேமிப்பை எல்லாம் செலவழித்து விட்டதாகச் சொன்னார்.
ஆனால், தேர்தல் ஆணையத்தில் இவர் தாக்கல் செய்த கணக்கில், இவரது சொந்தப் பணத்தில் இருந்து செலவழித்த தொகை என எதையும் குறிப்பிடவில்லை. கட்சி கொடுத்த பணம், கடன் வாங்கி செலவு செய்த பணம் என்பவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். ஆனால், பேசும்போது தனது சேமிப்பை எல்லாம் இழந்துவிட்டேன் என்கிறார். அதுவே பொய்யாக இருக்கிறது.
ஆதாரம் இருக்கா? : தனது நண்பரிடம் இருந்து 3 லட்ச ரூபாய்க்கு ரஃபேல் வாட்ச்சை வாங்கியதாக கூறி இருக்கிறார். ஆனால், அண்ணாமலையிடம் பணம் வாங்கிக்கொண்டு தான் அந்த வாட்ச்சை கொடுத்தேன் என அந்த நண்பரால் ஆதாரத்தை காட்ட முடியுமா? அல்லது அண்ணாமலையிடம் ஏதாவது எதிர்பார்த்து வாட்ச்சை கொடுத்தாரா என்பதெல்லாம் சந்தேகமாக இருக்கிறது.
ஆருத்ரா மோசடி விவகாரத்திலும் அண்ணாமலை நிறைய விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. பாஜக நிர்வாகி ஹரீஷ் பணம் கொடுத்து பாஜகவில் பதவி வாங்கி இருக்கிறார். ஆர்.கே.சுரேஷ் வெளிநாட்டுக்கே தப்பி ஓடிவிட்டார். ஆருத்ரா மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள். ஆனால், அவர்களை எல்லாம் திமுக செட்டப் செய்து கூட்டி வந்ததாக கூறுகிறார்.

திசைதிருப்பும் அரசியல் : பாஜக மீதான குற்றச்சாட்டுகளை எல்லாம் அலட்சியமாக தட்டி விடுகிறார். ஆனால், இவர் சொல்லும் குற்றச்சாட்டுகளை பூதாகரமாக்கி, இவர் சொல்வது எல்லாமே நடந்திருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார். பாஜகவில் இருந்து அண்மையில் வெளியேறிய கிருஷ்ண பிரபு கூட பாஜகவில் பணம் கொடுத்துத்தான் பதவி பெற வேண்டிய நிலை உள்ளதாக குற்றம் சாட்டுகிறார்.
அந்தக் குற்றச்சாட்டை அண்ணாமலையால் மறுத்து பேச முடியவில்லையே. அண்ணாமலை மீதான புகார் பட்டியல் பாஜக தலைமைக்குச் சென்றிருக்கிறது. அதில் இருந்து திசைதிருப்புவதற்காக சில வேலைகளைச் செய்கிறாரோ என்ற சந்தேகம் இருக்கிறது. அண்ணாமலை சொல்வதாலேயே ஊழல் குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை என்றாகி விடாது. அதை விசாரணை அமைப்புகள், நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications