சிகிச்சைக்குப் பணம் இல்லாததுதான் நா முத்துக்குமார் மரணத்துக்கு காரணமா?
சென்னை: சிகிச்சைக்குப் போதிய பணம் இல்லாமல் போனதுதான் கவிஞர் நா முத்துக்குமார் மரணத்துக்குக் காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் தமிழ் சினிமாவில் முதல் நிலைப் பாடலாசிரியராகத் திகழ்ந்தவர் முத்துக்குமார். இந்த ஆண்டும் கூட இதுவரை அவர்தான் அதிகப் பாடல்களை எழுதியுள்ளார்.
பாடல் எழுதி போதுமான அளவு சம்பாதித்தாலும், அவருக்கு தயாரிப்பாளர்கள் சம்பளமாகத் தந்த காசோலைகள் பல வங்கியில் பணமின்றி திரும்பிவிட்டனவாம். ஆனால் சம்பந்தப்பட்ட யாருடனும் அதற்காக சண்டை போடாமல் அந்த காசோலைகளை அப்படியே வைத்துவிடுவாராம் முத்துக்குமார்.
இப்படி அவருக்கு வாராக் கடனாக மாறிப் போன காசோலைகள் மட்டுமே ரூ 60- 70 லட்சத்தைத் தாண்டும் என்கிறார்கள்.
அவருக்கு மஞ்சள் காமாலை தாக்கி, ஆபத்தான கட்டத்தில் சிகிச்சைப் பெற்றுள்ளார். அப்போது அவரது சிகிச்சைக்காக பெரும் தொகை தேவைப்பட்டிருக்கிறது. ஆனால் அதை அவர் யாரிடமும் சொல்லாமல், எப்படியாவது சமாளித்துவிடலாம் என்று தாமதப்படுத்திவிட்டார் என்கிறார்கள் இன்னும் சிலர்.
நோய் தீவிரமடைந்த நிலையில் மாரடைப்பும் அவரைத் தாக்கியுள்ளது. அதனால் அவர் மரணத்தைத் தழுவினார் என்கிறார்கள் முத்துக்குமாருக்கு நெருக்கமானவர்கள்.
சரி.. முத்துக்குமார் இருந்தபோது செல்லாக் காசோலைகள் தந்தவர்கள், இப்போது அவரது குடும்பத்தின் சூழல் கருதி தாங்களாகவே முன்வந்து பணமாகத் தந்தால் எதிர்காலத்துக்கு உதவுமே.. செய்வார்களா?