கூலிப்படையால் எரித்துக் கொல்லப்பட்டாரா வேந்தர் மூவீஸ் மதன்? பதற வைக்கும் தகவல்கள்!
சென்னை: தற்கொலைக் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ள வேந்தர் மூவீஸ் மதன், எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பதற வைக்கும் தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன.
எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவுக்கு மிக நெருக்கமாக இருந்தவர் மதன். பச்சமுத்துவின் மகன் இவர் எனும் அளவுக்கு இருவருக்கும் நெருக்கம். இவர் கடந்த 27ம் தேதி 5 பக்க கடிதத்தை எழுதி வைத்து விட்டு மாயமாகி விட்டார்.
இதுவரை மதனை கண்டுபிடிக்க முடியவில்லை. மதன் மாயமான முதல் 3 நாட்கள் எந்தவித புகாரும் அளிக்கப்படவில்லை. இன்றுடன் 8 வது நாள். இதுவரை அவர் எங்கு இருக்கிறார், என்ன ஆனார் என்று தெரியவில்லை. அவரது பிஎம்டபிள்யூ கார் சென்னை விமானநிலைய பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்தது.
அவர் உண்மையிலேயே விமானத்தில் சென்றாரா அல்லது அவர் விமானத்தில் சென்றதுபோன்று தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு அவரை தீர்த்துக் கட்டிவிட்டார்களா என்ற கேள்வி நீடிக்கிறது. காசிக்கு சென்ற டி சிவா உள்ளிட்ட மதனுக்கு நெருக்கமானவர்கள் கங்கையில் 5 படகுகளில் சென்று தேடிப் பார்த்தனர்.
வட இந்தியாவில் மதனுக்கு உள்ள தொடர்புகள் மூலமும் விசாரித்துப் பார்த்தனர். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சடலம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எனவே அவர் கங்கையில் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று வாரணாசி போலீசார் தெரிவித்துவிட்டனர்.
அவர் பக்கத்து நாடுகள் எதிலேனும் பதுங்கிவிட்டாரா என்றாலும், அவரது பாஸ்போர்ட் எந்த விமான நிலையத்திலும் பதிவாகவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது. மதன் ஒரு மர்ம மனிதராகவே பார்க்கப்பட்டு வந்தார்.
எஸ்ஆர்எம் கல்லூரி அட்மிஷன் விவகாரத்தில் அவருக்கு நிறைய எதிரிகள் இருந்ததாகக் கூறுகிறார்கள். அட்மிஷனுக்காக வாங்கிய பண விவகாரத்தில் அல்லது இத்தனை காலம் அனைத்து உண்மைகளையும் தெரிந்து திடீரென அவருக்கு விரோதமாகப் போன சிலர் அவரை எரித்துக் கொன்றிருக்கலாம் என்ற தகவல் இன்று பிற்பகலுக்குப் பிறகு சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறையிடம் கேட்டபோது, "மதன் பற்றி எந்தத் தகவலும் இன்னும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. யூகங்களை வைத்து எதுவும் சொல்ல முடியாது என்றாலும், எந்த சாத்தியக் கூறுகளையும் ஒதுக்கவில்லை. அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம். இதில் ஏதாவது திசை திருப்பல் நடந்துளளதா என்றும் விசாரித்து வருகிறோம். அனைத்து விமான நிலையங்களிலும் விசாரணை செய்துவிட்டோம். எந்த தகவலும் கிடைக்கவில்லை," என்றனர்.