எங்களுடன் தேமுதிக-பாஜக கூட்டணி அமைக்க முன் வந்தால் நாங்க ரெடி: அன்புமணி
சென்னை: பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் பாமகவுடன் கூட்டணி வைக்க வந்தால் வரவேற்க தயாராக இருப்பதாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கட்சிகள் கூட்டணியை முடிவு செய்வதில் ஆவலாய் உள்ளன. ஏற்கனவே காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அந்த கூட்டணிக்கு தேமுதிக வரும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்புகிறார்.

இந்நிலையில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
வரும் 27ம் தேதி நடக்கும் மாநாட்டிற்கு பிறகு பாமக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிடும். தேர்தல் கருத்துக்கணிப்புகளை கருத்து திணிப்பு எனலாம். தேர்தல் கருத்துக்கணிப்புகளை ஊடகங்கள் வாயிலாக மக்கள் மனதில் திணிக்க முயல்கிறார்கள். நான் சந்தித்த 100 பேரில் 90 பேர் மாற்றத்தை விரும்புவதாக தெரிவித்தனர்.
பாமக மாநாடு அரசியலில் திருப்புமுனையாக அமையும் என்று எல்லாம் கூற மாட்டேன். இது அரசியல் கட்சிகள் இதுவரை கண்டிறாத வித்தியாசமான மாநாடாக இருக்கும். மாநாட்டில் முக்கிய முடிவுகள், அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றார்.
பாமக, பாஜக, தேமுதிக கூட்டணிக்கு வாய்ப்பு ஏதும் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் கூறுகையில், திமுக, அதிமுகவை தவிர மற்ற கட்சிகள் எங்களுடன் கூட்டணி வைக்க வந்தால் வரவேற்க தயாராக உள்ளோம். அப்படி எந்த கட்சிகளும் வராவிட்டாலும் ஒரு பிரச்சனையும் இல்லை என்றார்.
யார் கூட்டணிக்கு வந்தாலும் முதல்வர் வேட்பாளர் அன்புமணி தான் என்பதில் பாமக திட்டவட்டமாக உள்ளது. இதனால் தேமுதிக அதில் இணைந்தாலும் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றாக வேண்டும். இது நடக்க வாய்ப்பே இல்லை.
அதே நேரத்தில் மரியாதையான ஓட்டு கிடைத்தால் போதும், எம்எல்ஏ சீட் ஜெயிப்பது கூட பெரிய கனவில்லை என்ற நிலையில் இருக்கும் பாஜகவுக்கு அன்புமணியின் அழைப்பு பெரும் ஆறுதலாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications