சசிகலா குடும்பத்தின் அரசியல் ஆசையை முடக்கவே விவேக், கிருஷ்ணப்ரியாவிற்கு குறி?
சசிகலா குடும்பத்தின் அரசியல் ஆசையையை அடியோடு முடக்கவே விவேக்கை குறி வைத்து வருமான வரி சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை : அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் அரசியல் ஆசைக்கு நிரந்தரமாக மூடுவிழா காணும் விதமாகவும் இதற்கு அடித்தளமான தொழில் சாம்ராஜ்யத்தை முடக்கவுமே விவேக்கை குறி வைத்து வருமான வரி சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவில் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு நேரடியாக அவசர அவசரமாக களத்தில் குதித்து கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். அத்தோடு நின்றிருந்தாலாவது இன்று தமிழக அரிசியலில் அதிமுகவின் நிகழ்வுகள் வேறு விதத்தில் இருந்திருக்குமோ தெரியவில்லை.
ஆனால் அவதி அவதியாக கட்சியின் பொதுச் செயலாளர் ஆன கையோடு முதல்வராக முயற்சித்து கடைசியில் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு தூக்கி சசிகலாவை ஜெயிலில் போட்டுவிட்டது. தான் போனாலும் ஜெயலலிதா போல சிறையில் இருந்து நிழல் உலக ஆட்சி செய்யலாம் என்று நினைத்தார் சசிகலா.
அங்கும் சறுக்கலைக் கண்டார் சசிகலா. தனக்கு பிறகு அதிகார மையமாக இருக்கும் பொறுப்பை டிடிவி தினகரனிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார் சசிகலா. அவருக்கும் அவசரம்....கோஷ்டி சண்டையில் ஆர்கே நகர் தேர்தலில் தானே களமிறங்க, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டு திஹார் சிறைக்கு சென்றார்.

சசிகலா சொன்ன வார்த்தை
சசிகலா குடும்பத்தில் யாரெல்லாம் அதிகார மையமாகத் துடிக்கிறார்களோ அவர்களுக்கு ரவுண்டு கட்டி தலை கிறுகிறுக்க வைக்கிறது டெல்லி. அண்மையில் கணவர் நடராஜனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பார்த்துக் கொள்வதற்காக பரோலில் வந்த சசிகலா தனது அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தான் தங்கினார்.

முன்னிலைப்படுத்தப்பட்ட விவேக்
இந்த 5 நாட்களில் கணவரை சென்று பார்த்து வந்ததைவிட கட்சி தொடர்பாக அவர் அதிகம் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகின. அதே போன்று இனி கட்சியில் விவேக் மற்றும் கிருஷ்ணப்ரியாவை முன்னிலைப்படுத்தலாம் என்று சசிகலா கூறிவிட்டு சென்றதாகவும் சில செய்திகள உலா வந்தன. ஏற்கனவே கிருஷ்ணபிரியாவும் ஜெயலலிதா போலவே உடையலங்காரம் செய்து கொண்டதோடு நீட் எதிர்ப்பு போராட்டம் மூலம் சமூக பிரச்னைகளில் தனது பங்களிப்பு என்ற ஆயுதத்துடன் களத்தில் குதித்தும் இருந்தார்.

சுற்றி வளைத்த அதிகாரிகள்
5 நாட்களாக வருமான வரி சோதனை தோண்டித் துருவியதில் கடைசியில் இந்த ரெய்டு முழுவதுமே விவேக், கிருஷ்ணப்ரியாவை சுற்றி பின்னப்பட்ட வலை தான் என்று தெரிய வந்துள்ளது. 9ம் தேதி காலையில் தொடங்கிய விசாரணையின் முடிவில் இன்று அதிகாரிகள் விவேக் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.

திரும்பி வருவாரா?
விவேக் வீட்டில் இருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதோடு விவேக் ஜெயராமனையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். 5 நாட்களுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த விவேக் வாட்ட முகத்துடனே காரில் ஏறிச் சென்றுள்ளார். 5 நாட்களாக அவரை வீட்டில் வைத்து செய்தது பத்தாது என்று தற்போது அதிகாரிகள் விவேக்கை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றுள்ளனர். இது எத்தனை நாட்களுக்கு நீடிக்குமோ அல்லது இது கைதில் கொண்டு போய் முடிக்குமோ என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications