சட்டசபைக்கு வரவில்லை விஜயகாந்த்... ஒரு மாத பேப்பரை படிச்சு முடிச்சுட்டு வர லேட்டாகும் போல!
சென்னை: தமிழக எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க வரவில்லை. ஒருமாதம் மலேசியா, சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு விஜயகாந்த் நேற்று சென்னை திரும்பினார்.
சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பேப்பரை படித்துவிட்டுதான் பதில் சொல்வேன் என்று கூறினார். ஆனால் இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த் வரவில்லை.
ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து, கடந்த அக்டோபர் 28ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பங்கேற்ற கையோடு, மலேசியா புறப்பட்டு சென்றார் விஜயகாந்த். மலேசியா மற்றும் சிங்கப்பூரில், ஒரு மாதம் வரை தங்கி மகன் நடிக்கும் படப்பிடிப்பு வேலைகளை பார்வையிட்ட அவர் நேற்று அவர் சென்னை திரும்பினார்.
நேற்று மாலையில் கட்சியின் மாநில நிர்வாகிகளை அழைத்து, அவசரமாக விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய
மாநில நிர்வாகிகள், விஜயகாந்திடம், சட்டசபைக்கு வரவேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. அதற்கு விஜயகாந்த், 'மூன்று நாள் மட்டுமே சட்டசபை நடக்கிறது. இதில், கடைசி நாளில் மட்டுமே, எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்கப்படும். அனைத்து எதிர்க்கட்சிகளும் பேசுவதற்கு, ஒரு நாள் போதாது. அதனால், இதை காரணம் கூறி, சட்டசபையை புறக்கணிக்கலாம் என்று கூறியதாக தெரிகிறது.
ஆனால் அதற்கு நிர்வாகிகள், சட்டசபை கூட்டத்தொடரில் எம்.எல்.ஏக்கள் பங்கேற்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். உடனே விஜயகாந்த் கட்சியின் எம்.எல்.ஏ.,க்களுக்கும் தகவல் கூறி, சென்னைக்கு வரச் சொல்லுங்கள். சட்டசபைக்கு செல்வது குறித்து முடிவு செய்து கொள்ளலாம்' எனக் கூறினாராம்.
இதையடுத்து, மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்களுக்கு தகவல் தெரிவித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க சென்னை வந்துள்ளனர். இன்று காலையில் சட்டசபை கூடியதும் தேமுதிக எம்.எல்.ஏக்கள் அனைவரும் அவைக்குள் சென்று தங்களின் இருக்கையில் அமர்ந்தனர்.கூட்டத்தொடரை நீடிக்கச் சொல்லி அமளியில் ஈடுபட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
அனைவரையும் வரச்சொன்ன விஜயகாந்த் இன்று சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஒருவேளை ஒருமாத தமிழ் பேப்பரையும் படித்து முடித்துவிட்டுத்தான் சட்டசபைக்கு வருவாரோ என்னவோ?
சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்ற போது நாக்கை துருத்தி, கையை ஓங்கி ஆளுங்கட்சியினரை பார்த்து பேசினார் விஜயகாந்த். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த முறையும் அதுபோல காட்சிகள் அரங்கேறி விடுமோ என்று அச்சப்படுகிறாரோ விஜயகாந்த்?.