என்ன தைரியத்தில் அரசியல் களத்தில் குதிக்கிறார் விஷால்?
தேர்தலில் போட்டியிட ஆலோசித்து வருவதாக விஷால் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: களத்தில் அடுத்தது யாரு? விஷாலா?
ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை சட்டமன்ற தேர்தலில் நிறுத்தலாம் என்று சில முயற்சி நடந்ததாம். அதற்காக பிரதமர் நேருவை சந்திக்க டெல்லி சென்றார் கலைவாணர். பிரதமர் நேருவும் கலைவாணரை சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார். இதைக்கேள்விப்பட்ட ஒரு அரசியல் பிரமுகர், 'கூத்தாடிகள் எல்லாம் சட்டசபைக்குள் வந்தால் அது உருப்படுமா?' என்று கேள்வி எழுப்பினார்.
இதை அறிந்த கலைவாணர், பிரதமர் நேருவை சந்திக்காமலேயே தமிழகம் திரும்பிவிட்டார். சிரிப்பும், சிந்தனையும், பகுத்தறிவும், பக்குவமும், மனித நேயமும், மக்கள் பற்றும்கொண்ட கலைவாணரையே அன்றைய தமிழகம் சட்டசபைக்குள் அனுமதிக்க மறுத்தது. ஆனால் இன்றைக்கோ இவர்களை தவிர வேறு யாராவது ஆட்சியில் அமர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மனக்கோட்டை
அந்த காலத்தில், அரசியலுக்காக உடல்ரீதியான துன்பங்களையும், மனரீதியான அவமானங்களையும் அனுபவித்ததுடன், அனைத்தையுமே அர்ப்பணிக்க காந்தி, நேரு நேதாஜி, அரவிந்தர் போன்றவர்கள் எல்லாம் இருந்தார்கள். ஆனால் இன்று பணம், புகழ் போன்றவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு கட்சியை நடத்தலாம் என்றும், அதை வைத்து ஆட்சியை பிடித்து விடலாம் எனவும் மனக்கோட்டை கட்டிக்கொண்டு ஆளாளுக்கு கட்சியை தொடங்கிவிட்டனர். அந்த லிஸ்ட்டில் இப்போது வந்து சேர்ந்திருப்பவர் நடிகர் விஷால்!

புரட்சி புயல்
அன்று ஆர்.கே.நகர் தேர்தலில் எப்படியும் ஜெயித்தே தீருவது என்று அதிமுகவின் ரெண்டு அணிகளும் நீயா? நானா? என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் வேட்பாளராக உள்ளே புகுந்தார் இந்த "புரட்சி புயல்". தமிழகத்தில் மக்களை பிரித்து ஆளும் சில கட்சிகளுக்கு ஒரு நல்ல மாற்றமாக விஷாலை ஒரு சிலர் ஏற்றுக் கொண்டது உண்மைதான். அவ்வளவு எதற்கு... டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலே வாழ்த்தும் தெரிவித்திருந்தார்.

காணாமல் போய்விட்டார்
ஆனால், வேட்பு மனு தவறாக தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து குக்கர்கள், கரன்சிகளுக்கு இடையே திக்குமுக்காடி போனார் விஷால். அதன்பின் டூப்ளிகேட் கையெழுத்து, வேட்பு மனு நிராகரிப்பு, தர்ணா என ஆர்கே நகரை சூடேற்றிவிட்டு கடைசியில் அரசியல் மேடையில் காணாமலே போய்விட்டார்.

தெரசா, கலாம்
தற்போது புது இயக்கம் தொடங்கி இருக்கிறார். அப்துல் கலாமையும், அன்னை தெரசாவையும் முன்னிறுத்தி இந்த அமைப்பை அறிவித்துள்ளார். விஷால் தந்திரம் இங்கேதான் இருக்கு. கலாம், தெரசா... இவங்க இரண்டு பேருமே எந்த பிரச்சனையும் இல்லாதவர்கள். எல்லா தரப்பு மக்களாலும் எல்லா காலங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள். உலகிலேயே எந்த விவகாரத்தையும் எழுப்பாதவர்கள்... எழுப்பவும் தெரியாதவர்கள்! கட்சி அறிவிப்பில் இவர்களை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சேவையே மூச்சு
இந்த இடத்தில் விஷால் ஒன்றை நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டும்.. மனிதநேயமும், நல்லெண்ணமும், சேவை மனப்பான்மையும், எல்லாக் காலத்திலும் - இருந்துவரக்கூடிய குணாம்சங்களாகும்! அவை திடீரென்று முளைக்கக் கூடியதல்ல. விஷால் கூறிய இருவருமே அன்பாலும், சேவையாலும் விளம்பரமே இன்றி மக்கள் மனதில் ஒட்டிக் கொண்டவர்கள். அரசியல் பக்கமே தலை வைத்தும் படுக்க நினைக்காதவர்களும் கூட.

நிறைவேறியதா?
அடுத்ததாக திருப்பரங்குன்றத்தில் களமிறங்குவதை பற்றி யோசித்து முடிவு சொல்கிறேன் என்று விஷால் சொல்கிறார். ஆர்கே நகரில் விஷால் போட்டியிட்டபோது ,அவர் நடிகர் சங்க தலைவராக உச்சத்தில் இருந்தார். அவருக்கென சினிமா, மற்றும் நடிகர் சங்கத்தில் ஒரு பெயர் இருந்தது. இப்போது நடிகர் சங்கத்தில் அவர் செய்த நல்ல காரியங்கள் என்னென்ன? கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி விட்டாரா? சங்க கட்டிடத்தை கட்டி முடித்துவிட்டாரா?

சங்க கட்டிடம் எங்கே?
சங்க தலைவராக பதவியேற்றதில் இருந்தே மூத்த நடிகர்களுடன் வம்பும், பிரச்சனையும்தான். யாரிடமும் சமரச போக்கை கையாளவில்லை. இதோ இப்போது நடிகர் சங்க தலைவர் பதவியும் முடியப்போகிறது. சங்கத்தையும் ஒழுங்காக நிர்வகிக்காமல், கட்டித்தையும் கட்டி முடிக்காமல், இப்போது கட்சியை ஆரம்பித்து கொண்டு தேர்தலில் போட்டியிட யோசிப்பேன் என்றால் என்ன அர்த்தம்?

எப்படி யோசிக்க முடிகிறது?
மீண்டும் நடிகர் சங்க தேர்தல் வந்தால் தோற்றுவிடுவோம் என்ற பயம் வந்துவிட்டதா விஷாலுக்கு? அப்படியென்றால் கட்சி ஆரம்பித்து இருக்கிறாரே, நடிகர் சங்க தலைவர் பதவியை விஜயகாந்த்தைப்போல் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறாரா? கட்டிடம் கட்டுவதை இப்படி பாதியிலேயே நிறுத்திவிட்டு மக்கள் பணி செய்ய போகிறேன் என்றால் எப்படி? நடிகர் சங்கத்தின் செயல்பாட்டிலேயே விஷாலின் வண்டவாளம் தெரிந்துவிட்டதே. பிறகு எப்படி திருப்பரங்குன்றத்தில் நிற்பது பற்றி யோசிக்க முடிகிறது?

சினிமா பட்டாளம்
அதுமட்டுமல்ல, ஆர்.கே.நகர் தொகுதியில் அப்போது விஷால் போட்டியிட வரும்போது போட்டியாளர்கள் குறைவு. இப்போதும் அப்படியேவா இருக்கிறது? ஒருபக்கம் எழுச்சி நாயகனாக ஸ்டாலின் வளர்ந்து வருகிறார், மற்றொரு பக்கம் மக்கள் நலனே என முழக்கமிட்டு கமலஹாசன் மேலே வந்து கொண்டிருக்கிறார். இதற்கு நடுவில் ரஜினி, அப்பப்போ வந்து வந்து போகிறார் (ஆனால் போட்டியெல்லாம் இட மாட்டார்). இதெல்லாம் தாண்டி நடிகர் விஜய் ஒரு பக்கம் களம் இறங்க தயாராகி வருவதாகவும் தெரிகிறது. அரசியல் களத்தில் அவரது 'சினிமா பட்டாளமே' நிறைந்து வழிகிறது. இதில் எப்படி போட்டியிட்டு வெற்றி பெற முடியும்?

3 தைரியங்களா?
தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு விஷாலுக்கு உள்ள தைரியங்கள் என்னென்ன? ஒன்று சினிமா கவர்ச்சி + சினிமா பாப்புலாரிட்டி, இரண்டு பணம். மூன்றாவது ஜாதி ரீதியான ஓட்டுகள். இதில், பாப்புலாரிட்டி என்பது இவரைவிட மற்ற அரசியல், மற்றும் சினிமா நட்சத்திரங்களுக்கு கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கு. அடுத்தது பணம் செலவழிப்பது. இதையும் பெரும்பாலானோர் தேர்தல் களத்தில் வாரி இறைக்கவே செய்திருக்கிறார்கள். இனியும் செய்வார்கள். மற்றொன்று அவருக்குரிய சாதி ஓட்டுகள்! இவரது சாதி என்று மட்டுமில்லை, எல்லா வகை சாதி மக்களையும் கரைத்து குடித்தவர்கள்தான் அதிமுக, திமுகவினரும். ஒருவேளை தான் 'இந்த இனத்தை சேர்ந்தவர்' என பகிரங்கமாக இவர் அடையாளப்படுத்தி கொண்டால், அதுதான் விஷாலின் ஆகப் பெரும் மைனசாக இருக்க முடியும்.

அடையாள அரசியலே
நடிகர் சங்க தலைவர் என்ற முறையில்தான் எதுவும் செய்யவில்லை. மக்கள் சேவையையாவது முதலில் செய்ய தொடங்கட்டும். அதன்பிறகு தேர்தலை பற்றி யோசிக்கலாம்! இதெல்லாம் ஒரு அடையாள அரசியல் என்று சொல்வதை தவிர வேற என்னத்த சொல்றது?!












Click it and Unblock the Notifications