திருப்பூரில் மீண்டும் பகீர்- ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்ததாக சந்தேகிப்பட்ட கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது!
திருப்பூர்: கேரளாவில் இருந்து மாயமாகி உலகின் மிக மோசமான பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்துவிட்டதாக சந்தேகிக்கப்பட்ட 2 பேர் திருப்பூரில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளம் பெண்கள், இளைஞர்கள் என 17 பேர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திடீரென மாயமாகினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள். மாயமானவர்களில் சிலர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.

சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு சென்று அங்கு ஐ.எஸ். இயக்கத்தில் இவர்கள் அனைவரும் சேர்ந்து விட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக காசர்கோடு எம்.பி. கருணாகரன் அண்மையில் முதல்வர் பினராயி விஜயனிடம் முறையிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சட்டசபையில் விளக்கம் அளித்த பினராயி விஜயன், அரசுக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் கேரளாவில் இருந்து மொத்தம் 21 பேர் மாயமாகி உள்ளனர். இவர்களில் 17 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், மற்ற நால்வரும் பாலக்காடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் எனக் கூறினார்.
இந்த நிலையில் கேரளாவில் மாயமான 21 பேரில் 2 பேரை திருப்பூரில் போலீசார் கைது செய்து உள்ளனர். கேரள மாநிலம் பாலக்கோட்டைச் சேர்ந்த முகமது சமீர், சல்மான் இருவரும் கடந்த 20 நாட்களாக திருப்பூரில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்து உள்ளனர்.
இருவரது மொபைல் போன் சிக்னலை கண்காணித்த கேரளா போலீசார் திருப்பூர் போலீசார் உதவியுடன் கைது செய்தனர். அண்மையில்தான் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதி மொஷிருதீன் திருப்பூரில் சிக்கினார். கடந்த 6 ஆண்டுகாலமாக திருப்பூரில் பதுங்கியிருந்தபடியே ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பு பணியை அவர் மேற்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தவர்களாக சந்தேகிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 2 பேர் திருப்பூரில் சிக்கியிருப்பது திருப்பூரில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications