வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது "ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். -1எப்" செயற்கைக்கோள்!
சென்னை: இந்தியாவின் 6வது வழிகாட்டி செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 எஃப், பி.எஸ்.எல்.வி சி 32 ராக்கெட் மூலம் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்வெளியில் பாய்ந்தது.
1,425 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோளானது முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதாகும். இதன் செயல்பாட்டை செல்போன் நிறுவனங்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளன.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வரிசையில் மொத்தம் 7 செயற்கைக் கோள்களை செலுத்தத் திட்டமிடப்பட்டது. அதில் இதுவரை 5 செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டு விட்டன. இன்று 6 ஆவது செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜிபிஎஸ் தேவையில்லை இனி:
இந்த செயற்கைக் கோளை செலுத்தியிருப்பதன் மூலம் அமெரிக்காவின் ஜி.பி.எஸ் வழிகாட்டியை நாம் பயன்படுத்த வேண்டிய அவசியம் இனி நமக்கு இருக்காது. நமது நமது நாட்டின் பிரத்யேக எஸ்.பி.எஸ். வழிகாட்டியை பொதுமக்கள் பயன்படுத்தும் வாய்ப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் உருவாகலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
|
விண்ணில் நிலை நிறுத்தம்:
மொத்தம் 7 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோள்களை ஏவத் திட்டமிடப்பட்டது. அதில் இதுவரை 1 ஏ முதல் இ செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது எப் செயற்கைக் கோள் செலுத்தப்பட்டுள்ளது.

துல்லியமான கண்காணிப்பு:
விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள 5 செயற்கைக்கோள்களும் நாள்தோறும் 18 மணி நேரத்துக்கு தங்களது பணிகளைச் செய்து வருகின்றன. இந்தச் செயற்கைக்கோள்கள் மூலம் 1,500 கி.மீ சதுர பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாகக் கண்காணிக்க முடியும். மேலும் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும். இந்தச் செயற்கைக்கோள்கள் இந்தியாவுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டவையாகும்

இது ஆறாவது செயற்கைகோள்:
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஜி (7 வது) செயற்கைக்கோள் மார்ச் இறுதியில் விண்ணில் ஏவப்படும் வாய்ப்பு இருப்பதாக இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார். இதன் மூலம், இந்தியா மட்டுமல்லாது பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் கடல், சாலை, நிலப் பரப்புகளையும் கண்காணிக்க முடியும். இதன்பிறகு, இந்தியா முழுமைக்குமான செயற்கைக்கோள் வழிகாட்டியை உருவாக்கிவிட முடியும்.

கடல் எல்லை அறிய:
ஐ.என்.ஆர்.எஸ்.எஸ். செயற்கைக்கோள்களின் எஸ்பிஎஸ் வழிகாட்டி மூலம் கடல் எல்லைகளை துல்லியமாகக் கண்டறிய முடியும். இதன்மூலம், மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் பிரச்னைக்குத் தீர்வாகவும் இது அமையும் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தான், இலங்கைக் கடற்கரைப் பகுதிகளை இந்தச் செயற்கைக்கோள்கள் முழுமையாகக் கண்காணிக்கின்றன.

பிரச்சினைகளுக்கு தீர்வு:
எனவே, இந்த எஸ்பிஎஸ் வசதி முழுமையான செயல்பாட்டுக்கு வந்ததும், மீனவர்களின் படகுகளில் ரிசீவர்கள் பொருத்தப்படும். அவை, இந்திய எல்லையில் மீனவர்கள் இருக்கிறார்களா அல்லது இலங்கை எல்லையில் இருக்கிறார்களா எனச் சுட்டிக் காட்டிவிடும். இதே எச்சரிக்கை கடலோரக் காவல் படைக்கும் தெரிவிக்கப்படும். இதன்மூலம், கடல் எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications