ஐடி, அமலாக்கப் பிரிவு, சிபிஐ விசாரணை… 3 முனைகளில் விசாரிக்கப்படும் சேகர் ரெட்டி!
வருமானவரித் துறை, சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகிய 3 அமைப்புகள் சேகர் ரெட்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றன.
சென்னை: கணக்கில் காட்டாமல் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுக்களும், கட்டி கட்டியாக தங்கமும் பதுக்கி வைத்திருந்த சேகர் ரெட்டியிடம் வருமான வரித் துறை, அமலாக்கப் பிரிவு, சிபிஐ என 3 அமைப்புகளும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சேகர் ரெட்டிக்கு நெருக்கடி முற்றி வருகிறது.
தமிழக அரசின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் காண்டிராக்ட் பணிகளை சேகர் ரெட்டி செய்து வருகிறார். அவரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போது கணக்கில் காட்டாத ரூ.170 கோடி ரொக்கம், 167 கிலோ தங்கம் பிடிபட்டது. அத்துடன் ரூ.100 கோடிக்கு புதிய ரூ.2,000 நோட்டுகளும் சிக்கியது.
இதுதொடர்பாக தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் வருமானவரித்துறை, அமலாக்கப்பிரிவு, சிபிஐ ஆகிய 3 அமைப்பின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகள் நடத்த உரிமம் பெற்றுள்ள சேகர் ரெட்டிக்கு சொந்தமான, சென்னை, காட்பாடி வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. நான்கு நாட்களாக வருமான வரித்துறை நடத்திய சோதனை முடிவடைந்த நிலையில், சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறையினரின் கிடுக்குபிடி விசாரணை நடைபெற்று வருகிறது.
வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த தொண்டான்துளசி கிராமத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சேகர்ரெட்டி தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பினாமியாக இருந்தவர். மேலும், திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினராகவும் இருந்தார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான புதிய ரூபாய் நோட்டுக்கள், திருப்பதி தேவஸ்தான உண்டியலில் இருந்து மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, சேகர் ரெட்டியின் அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.