விடாது விரட்டும் வருமான வரித்துறை.. அமைச்சர் விஜயபாஸ்கர் உறவினர்கள் தங்கியுள்ள விடுதியில் ரெய்டு!
அமைச்சர் விஜயபாஸ்கரின் உறவினர்கள் தங்கியுள்ள விடுதி அறைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரான நிலையில், அவரது உறவினர்கள் தங்கியுள்ள விடுதி அறைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்தலையொட்டி தாராளமாக பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் ஆணைத்திற்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலை துணை வேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்டோரின் வீடுகள் உட்பட 50 இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ஆர்கே.நகரில் ரூ. 89 கோடி வரை பணவரிவர்த்தனை செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் புதுக்கோட்டையில் உள்ள இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் பெற்றோர் வசித்த வீட்டில் நடைபெற்ற வருமானவரிச் சோதனையில் 2 பெட்டிகள் நிறைய சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக விஜயபாஸ்கரின் தந்தை திருச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அதோபோல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை நேரில் ஆஜராகினார். 5 மணி நேரமாக நடந்த விசாரணையில் விஜயபாஸ்கர் சரியாக பதிலளிக்காததால் மீண்டும் விசாரிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் சென்னை பூக்கடையில் விஜயபாஸ்கர் உறவினர்கள் தங்கியுள்ள விடுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சை முருகப்பா செட்டித்தெருவில் உள்ள தனியார் விடுதியிலும் சோதனை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications