தமிழக ஆளுநரின் அப்பட்டமான சட்ட & மரபு மீறல்!
-எஸ்எஸ்
சந்தேகமில்லை. இதைவிட ஒரு அரசியல் சாசன சட்ட மற்றும் மரபு மீறலை இதுவரை எந்த மாநிலமும் கண்டிருக்காது.
ஜெயலலிதா, பன்னீர், சசிகலாவை மறந்து விடுங்கள்.
ஒரு மாநிலத்தில் அறுதிப் பெரும்பான்மை பெற்ற ஆளும் கட்சியின் அசைக்க முடியாத ஒரு முதல்வர் அகால மரணமடைகிறார். அந்த சூழலில் அந்தக் கட்சியில் ஏகப்பட்ட மாறுதல்கள் நடக்கின்றன. தற்காலிக முதல்வராக பதவியிலிருந்தவர் ராஜினாமா செய்கிறார். அதை ஆளுநரும் ஏற்றுக் கொள்கிறார். மொத்த எம்எல்ஏக்களும் - தற்காலி முதல்வர் உள்பட- அவர்களின் வசதிப்படி ஒருவரை முதல்வர் பதவிக்காக மொத்த எம்எல்ஏக்களும் தேர்வு செய்கின்றனர். அவர் இப்போது முதல்வர் பதவி ஏற்க வேண்டும். பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டிய ஆளுநர் என்ன செய்ய வேண்டும்?

ஒன்று, பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டவரை சட்டம் மற்றும் மரபுப்படி முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அல்லது, அவரை முதல்வராக்க முடியாத காரணத்தை நேர்மையாக, வெளிப்படையாகச் சொல்லி, ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்த வேண்டும். இதுதான் நேர்மையான ஜனநாயகம்.
ஆனால் 'தனக்கு அல்லது தன்னை இயக்கும் மத்திய அரசுக்குப் பிடித்த ஒருவரைத்தான் முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பேன். பெரும்பான்மை எம்எல்ஏக்களின் தேர்வு ஒரு பொருட்டல்ல... தனக்குப் பிடித்த ஒருவரைத் தேர்வு செய்யும் வரை தலை நகருக்கு வரமாட்டேன். ஓடி ஒளிந்து கொள்வேன். அவரவர் அடித்துக் கொள்ளட்டும்... நான் நினைத்தவரைத் தேர்வு செய்துவிட்டால் தலை காட்டுவேன்' என ஒரு ஆளுநர் செயல்படுவது எத்தனை பெரிய சட்ட மீறல்?
இன்று தமிழகத்தின் தற்காலிக ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ் செய்து கொண்டிருப்பது மேலே படித்ததைத்தான். யார் ஆலோசனைப்படி அவர் இதைச் செய்து கொண்டிருக்கிறார் என்பதற்கு தனி தெளிவுரை தேவையில்லை.
ஓபிஎஸ் சொல்வதெல்லாம் உண்மையாகவே இருக்கட்டும். சசிகலா முதல்வராவதில் உடன்பாடில்லைதான். ஆனால்... தமிழகம் ஒரு அசாதாரண சூழ்நிலையில் இருக்கும் நிலையில் ஆளுநர் இருக்க வேண்டியது சென்னையில். ஆனால் அவரோ சிறுபிள்ளைத் தனமாக, டெல்லியின் மோசமான ஏஜென்டாகவே நடந்து கொள்கிறார் என்ற நடுநிலையாளர்களின் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.
ஆளுநர் ஏன் சென்னைக்குத் திரும்பாமல் ஓடி ஒளிகிறார்? ஒரு வலுவான ஆளும்கட்சி உடைந்து சிதறி, குதிரை பேரம் நடக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறாரா? அதுவரை காத்திருக்கப் போகிறாரா?
இது அப்பட்டமான சட்ட மற்றும் மரபு மீறல். மாநிலங்களுக்கு எதிரான மத்திய அரசின் மோசமான இன்னொரு முன்னுதாரணம்.
கடந்த காலங்களில் எத்தனையோ மோசமான அரசியல் நிகழ்வுகள் அரங்கேற, அரசியல் அமைப்புச் சட்டம், மரபு போன்றவற்றை ஆளுநர்கள் துணைக்கழைத்துக் கொண்ட உதாரணங்களைப் பார்த்திருக்கிறோம். இன்று அதே சட்டம், மரபுகளை மதிக்காமல் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறார்கள் மோடியும் அவரது ஏஜென்ட் என வர்ணிக்கப்படும் வித்யாசாகர் ராவும்.
தமிழக அரசியலுக்கு துரதிருஷ்ட காலம் இது!












Click it and Unblock the Notifications