சரத்குமாரிடம் 8 மணிநேரமாக நடந்த கிடுக்குப்பிடி விசாரணை நிறைவு பெற்றது
நடிகர் சரத்குமார் ஆகியோரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணை முடிவுற்றது.
சென்னை: நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில், சரத்குமாரிடம் 8 மணி நேரமாக நடைபெற்று வந்த விசாரணை நிறைவு பெற்றது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 12 ஆம் தேதி நடைபெற இருந்தது. இத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம், பரிசுப் பொருட்கள் விநியோகித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து வருமான வரித்துறை அலுவலர்கள் கடந்த வெள்ளிக்கிழமை 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதநை நடத்தினர்.

அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் வீடு, நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்றது. இதில் ரூ.89 கோடி வரை ஆர்.கே. நகரில் செலவு செய்ததற்கான ஆவணம் சிக்கியது.
மேலும் அமைச்சர்களும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பணத்தை பெற்றது தெரிய வந்தது. இதுதொடர்பான சோதனை அறிக்கையை வருமான வரித்துறை ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவிடம் வழங்கியது. இந்நிலையில் மேற்கண்ட 3 பேரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐடி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்பு இன்று ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் விஜயபாஸ்கரிடம் 5 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் விஜயபாஸ்கர் சரியாக பதிலளிக்காததால் மீண்டும் அவரை விசாரிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதனிடையே விஜயபாஸ்கர் 3 நாட்கள் அவகாசம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிட்லபாக்கம் ராஜேந்திரனிடம் நடத்தப்பட்ட விசாரணையும் முடிவடைந்தது.
தொடர்ந்து சரத்குமாரிடம் மட்டும் விசாரணை நடந்து வந்தது. சுமார் 8 மணிநேரமாக நடைபெற்று வந்த விசாரணை தற்போது நிறைவுபெற்றது. இதையடுத்து வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து சரத்குமார் புறப்பட்டுச் சென்றார். பெரும்பாலான கேள்விகளுக்கு சரத்குமார் சரியாக பதிலளிக்காததால் நீண்ட நேரம் விசாரணை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications