மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் ஐடி அதிகாரிகள் கிடுக்குப் பிடி விசாரணை!
சென்னை: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக பதவி வகித்தவர் நத்தம் விஸ்வநாதன். இவர் மீது மின்சார கொள்முதல் உள்ளிட்ட பல புகார்கள் கூறப்பட்டன.
சட்டசபை தேர்தல் நேரத்தில் அதிமுக பிரமுகர் அன்புநாதன் வீட்டில் ரூ470 கோடி பிடிபட்டது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது வருமான வரித்துறை.

இந்த பணம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சென்னை மேயர் துரைசாமி உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்கள், பண்ணை வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். 2 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் நத்தம் விஸ்வநாதன் அதிமுகவில் வகித்து வந்த அமைப்புச் செயலர், செய்தி தொடர்பாளர் குழு பதவிகள் கூண்டோடு பறிக்கப்பட்டன.
தற்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நத்தம் விஸ்வநாதன் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முதல் இந்த விசாரணை தொடருகிறது. இதேபோல் சைதை துரைசாமி, அவரது மகன் வெற்றியிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications