ஐடி ரெய்டுக்கு பின் ஆடிப்போன ராம மோகன் ராவ்... கண்டு கொள்ளாத போயஸ் கார்டன்
வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்குப் பின்னர் அதிகம் ஆடிப்போயிருக்கிறாராம் ராம மோகன் ராவ், போயஸ் கார்டனில் இருந்த எந்த உதவியும் கிடைக்காததும் அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
சேகர் ரெட்டி உடனான தொடர்பு காரணமாக ராம மோகன் ராவ் வீட்டில் 25 மணி நேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் கைப்பற்றிய பொருட்கள், ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் வருமான வரித்துறையின் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்பதுஉறுதியானால் அதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். கைது செய்யவும் வாய்ப்பு உள்ளது. தனக்கு ஏற்பட்ட இவ்வளவு சிக்கலுக்கும் காரணம் சேகர் ரெட்டிதான் என்று கூறி வருகிறார் ராம மோகன் ராவ்.
அம்மா உயிரோடு இருந்த வரைக்கும் பார்த்தாலே பயப்படுறவங்க எல்லாம் இன்றைக்கு முகத்துக்கு நேரா பேசுறாங்க என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டாராம் ராம மோகன் ராவ்.
போயஸ் கார்டனில் உள்ள ஒருவரை தொடர்பு கொண்டு ராம மோகன் பேசியிருக்கிறார். இப்போதைக்கு எதைப்பற்றியும் யாரு கூடவும் பேசவும் வேண்டாம். எல்லாம் முடிவுக்கு வரட்டும். அப்புறம் பார்க்கலாம். என்று மட்டும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார்களாம். இதனால் இருண்டு போயிருக்கிறாம் ராம மோகன் ராவ்.
அரசியல்வாதிகளுக்கு உதவி செய்தால் இப்படித்தான் என்று ராம மோகன் ராவிற்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.