அமைச்சர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் ஐடி ரெய்டு.. ரூ.89 கோடி நகை, சொத்து ஆவணம் பறிமுதல்!
வருமான வரித்துறை சோதனையில் சுமார் 89 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் இதுவரையில் ரூ. 4.5 கோடி பணம், நகை, ரூ.89 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் வீடு, அலுவலகம், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, எம்எல்ஏ விடுதி உள்ளிட்ட 35 இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
காலையில் இருந்து பரபரப்பாக நடைபெற்று வந்த இந்தச் சோதனையின் போது பல்வேறு ரகசிய ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
அதிகாரி விளக்கம்
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் காலை 6 மணியில் இருந்து சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் விஜயபாஸ்கர் காலை 4 மணி முதல் சோதனை நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தார். இதனை வருமானத் துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
துன்புறுத்தல் அல்ல
யாரையும் நாங்கள் துன்புறுத்தவில்லை என்று வருமானவரித்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப கூறினோம் என்றும், புத்தக பையை சோதனையிட்ட பின் செல்ல அனுமதி அளித்தோம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
ஆதாரங்கள் சிக்கின
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறையில் சிக்கின. அது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.
எம்எல்ஏ விடுதி
சேப்பாக்கம் எம்.எல்.ஏ. விடுதியில் உள்ள விஜயபாஸ்கர் அறையில் வாக்காளர் பட்டியல் கைப்பற்றப்பட்டுள்ளது. எழும்பூரில் உள்ள தனியார் விடுதியிலும் வாக்காளர் பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.89 கோடி ஆவணம் பறிமுதல்
இன்று நடத்திய வருமானவரித் துறை சோதனையில் மொத்தமாக 4.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், நகை மற்றும் ரூ. 89 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.