ரூபாய் நோட்டை மாற்ற எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க.. சென்னை கல்லூரியில் ரூ8 கோடி அதிரடி பறிமுதல்!
சென்னையில் நூதன முறையில் கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயற்சித்த கல்லூரியில் இருந்து ரூ8 கோடி சிக்கியது.
சென்னை: செல்லாத நோட்டுகளை நூதன முறையில் மாற்ற முயற்சித்த கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து ரூ8 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
சென்னை ஜெயின் ஜோசப் பொறியியல் கல்லூரியில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது ரொக்கமாக ரூ8 கோடி பணம் கல்லூரியில் இருந்து கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கல்லூரி நிர்வாகம் தம்மிடம் பழைய ரூ500, ரூ1000 நோட்டுகளாக இருந்த ரூ8 கோடியை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்ற முடிவு செய்தது.
ஆனால் நேரடியாக இது சாத்தியம் இல்லை என்பதால் கல்லூரி ஊழியர்களின் வங்கிக் கணக்குகள் மூலமாக பதுக்கிய பணத்தை வெள்ளையாக்க திட்டமிட்டுதான் பணம் கொண்டுவரப்பட்டதாம். இத்தகவல் வருமான வரித்துறைக்கு செல்ல ஒட்டுமொத்தமாக ரூ8 கோடி ரொக்கமும் இப்போது பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது.
நாடு முழுவதும் இப்படி கருப்பை வெள்ளையாக்கும் யுத்திகள் நாள்தோறும் அம்பலமாகி வருகின்றன.