ஜெ. பிறந்த நாளன்று அன்னதானம்.. சாப்பிட்டுக் கொண்டே ரசிக்க 'குத்தாட்டம்'.. இது தூத்துக்குடி கோலாகலம்!
தூத்துக்குடி: முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தூத்துக்குடியில் அதிமுக சார்பில் அன்னதானம் நடைபெற்றது. அப்போது மேடை போட்டு குத்தாட்டமும் நடந்ததால் மக்கள் பரபரப்படைந்தனர். ஆனால் சாப்பிட வந்தவர்கள் அக மகிழ்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் அந்தோணி கிரேஸ் மகனும் அதிமுக இளைஞரணியைச் சேர்ந்தவருமான கவிஅரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று 15,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகிலுள்ள எஸ்.ஏ.வி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்த அன்ன தான விழாவினை மேயர் அந்தோணிகிரேஸ் துவக்கி வைத்தர்.
விழாவில், பங்கேற்ற பொதுமக்களுக்கு அசைவ விருந்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், துணைமேயர் சேவியர், அதிமுக நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில், மேடை அமைக்கப்பட்டு ஆடல்-பாடல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் சாப்பிட வந்த பொதுமக்களை உற்சாகப்படுத்தும் வகையில் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடினர் கலைஞர்கள்.
அதேபோல எம்.ஜி.ஆர் பாடல்களுக்கு ஏற்ப அவரது வேடத்தில் ஆண்-பெண் கலைஞர்கள் மேடையில் குத்தாட்டம் போட அதனை காண்பதற்கு கூட்டம் குவிந்து விட்டது. இதில் சிலர் மது போதையிலும் வந்து, மேடை முன்பு ஆட்டம் போட்டு கலக்கினர்.