நடராஜனுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் இரங்கல் தெரிவிக்காதது வேதனையளிக்கிறது... காதர் மொகிதீன்!
மறைந்த நடராஜன் உடலுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Recommended Video
தஞ்சாவூர் : புதிய பார்வை ஆசிரியர் ம. நடராஜன் மறைவிற்கு முதல்வரும், துணை முதல்வரும் இரங்கல் தெரிவிக்காதது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது என்று பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் நடராஜனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
புதிய பார்வை ஆசிரியர் ம. நடராஜன் உடல் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் அருளானந்தம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்போது அவரது மனைவி சசிகலா நடராஜனுக்கும், டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ. ஆகியோருக்கு பேராசிரியர் காதர் மொகிதீன் ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கூறியதாவது: எம் நடராஜன் உடல்நலம் பெற்று வந்த நிலையில் நீண்ட காலம் வாழ்ந்து தமிழகத்திற்கு அரும்பெரும் சேவை ஆற்றுவார் என்று நம்பிய நமக்கு அவருடைய திடீர் மறைவு பேர் அதிர்ச்சியாக வந்துவிட்டது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்கும், குடும்பத்திற்கும் நீண்ட காலமாக சசிகலாவும், நடராஜனும் தொடர்ந்து தொண்டூழியம் செய்தவர்கள்.
ஜெயலலிதா ஆட்சியின் போது வெளிநாட்டு முதலாளிகள் தமிழகத்தில் மூலதனம் செய்து தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் நடைபெற்ற அயல்நாட்டு தொழிலதிபர்கள் கூடுவதற்கும், தமிழகத்தில் முதலீடுகள் செய்வதற்கும் உலக நாடுகளில் பலமுறை பயணம் செய்து அஇஅதிமுக அரசுக்குப் பெரிதும் உதவியவர் இவர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத், ஆ.கா அப்துஸ் ஸமத் சாஹிப்பின் நெருங்கிய நண்பராகவும் இருந்து வந்தவர். கூத்தாநல்லூர் தொழில் அதிபர் வடக்குக் கோட்டையார் சையது அஹமதுவுடன் மிகவும் நெருங்கிய நட்பும், வர்த்தக தொடர்பும் கொண்டிருந்தவர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அஇஅதிமுக கூட்டணியில் இல்லாவிட்டாலும் லீகின் தலைவர்களுடனும் தொண்டர்களுடனும் மிகவும் அன்பாகவும் பழகிய நல்லுள்ளம் கொண்ட நண்பர்.
குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல் தேறிய பிறகு அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பல்வேறு அரசியல் அனுபவங்களையும் இன்றைய நிலைமைகளையும் பகிர்ந்து கொண்டார். அவர் என் மீது மிகுந்த அன்பு பாராட்டி வந்தார்; அவர் என் உடன்பிறவா சகோதரர் என்னும் வாஞ்சையுடன் நானும் பழகி வந்துள்ளேன். தமிழுக்கும், தமிழரின் பெருமைக்கும் என்றும் உழைத்தவர் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். அவரின் ஆன்ம சாந்திக்கு வேண்டுவோம். அவரின் பேரிழப்பால் துடிக்கும் சசிகலா மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அ.தி.மு.க வளர்ச்சிக்கு ஒவ்வொரு ஊரிலும் அதன் வேராக இருந்து விருட்சமாக விரிவடைவதற்கு பாடுபட்ட நடராஜன் மறைந்திருப்பது மிகுந்த துக்ககரமான செய்தி. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அவருடைய பேரிழப்பை தாங்குகிற சக்தியை சசிகலாவிற்கு இறைவன் வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். அவருடைய ஆன்மா சாந்தியடைய எங்களுடைய வேண்டுதல்.
ஒருவர் மரண மடைந்தால் அவருடைய ஆன்மா சாந்திக்கு வேண்டுவது எல்லாருடைய தலையாய கடமையாகும். விரோதியாக இருந்தாலும் கூட அவர் இறந்த பிறகு அவர் விரோதி என்று கருதப்படுவது இல்லை. அவருக்கு மதம், ஜாதி, இனம், கட்சி என்ற முத்திரை கிடையாது. ஒரு மனிதர் இறந்திருக்கிறார். அவருடைய ஆன்மா சாந்திக்கு அனைத்து மனிதர்களும் வேண்டுவது அவரது இறப்பால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலும், தேறுதலும் கூறுவது மனிதாபி மான கடமைகளில் ஒன்றாகும். முதல்வரும், துணை முதல்வரும் இரங்கல் தெரிவிக்காதது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது என்றும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.