கேரளா எல்லைச் சோதனைச் சாவடியில் ஊழியர் பற்றாக்குறை: விடிய விடிய ஐயப்ப பக்தர்கள் காத்திருப்பு
செங்கோட்டை: தென்காசி அருகே புளியறை சோதனை சாவடியில் ஐயப்ப பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். போதிய ஊழியர்கள் இல்லாததால் சோதனைச் சாவடியில் இரவு முதல் வாகனங்கள் தேக்கமடைந்துள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக கேரளா எல்லைப் பகுதியான நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக 24மணி நேரமும் கேரளாவுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது சபரிமலை சீசன் என்பதால் இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து இருமடங்கு அதிகரித்துள்ளது.இதன் காரணமாக இந்தப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்ப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் வாகனங்கள் புளியரையில் உள்ள தமிழக போக்குவரத்து துறை (மோட்டார் வாகன)சோதனை சாவடியில் இரவு12மணிமுதல் பெர்மிட் போடுவதற்காக வாகனங்களை வரிசையில் நிறுத்தியுள்ளனர். அங்கு கணிணி இயக்க அனுபவம் வாய்ந்த பணியாளர் இல்லாததினாலும்,ஆன்லைன் பணியை சீராக செய்ய முடியாததினாலும் நள்ளிரவு முதல் ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் சாலையில் அணிவகுக்கத் தொடங்கியதால் போக்குவரத்து நெருக்கடி உருவானது.
இந்த நிலை காலை 7மணிவரை சீராகததால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெரியவர்கள், பெண்கள், முதியவர்கள்,குழந்தைகள் என அனைவரும் பெரிதும் அவதிப்பட்டனர். விடிய விடிய சாப்பாடு, குடிநீர் என எந்த வசதியும் இல்லாமல் தவித்த ஐயப்ப பக்தர்கள் மோட்டார் வாகன சோதனை சாவடியை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர்.

காலையில் விடிந்ததும் ஆங்கங்கே சாலையில் சமையல் செய்து பசியை போக்கினர் .ஆன்லைன் மூலம் ஐயப்பன் தரிசனத்திற்கு முன் பதிவு செய்த பக்தர்கள் பெரிதும் தவியாய் தவித்தனர். ஞாயிறன்று மண்டலபூஜை தொடங்க உள்ள நிலையில் அதிகரித்து வரும் ஐயப்ப பக்தர்கள் கூட்டத்தால் இன்னும் வாகன நெரிசல் ஏற்படும் நிலை உருவாகும்,என்பதால் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூடுதல் கணிணி பணியாளர்களை நியமித்து வாகன நெரிசலை குறைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்












Click it and Unblock the Notifications