சசிகலா, தினகரனால் என் உயிருக்கு ஆபத்து.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் தீபா பரபரப்பு புகார்!
சசிகலா மற்றும் தினகரனால் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: சசிகலா மற்றும் தினகரனால் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். சமூக வலைதளத்தில் அறுவறுப்பான கருத்தை பதிவிடுவதோடு, தொலைபேசியிலும் மிரட்டல்கள் வருவதாக தீபா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் ஜெ. தீபா பேரவையின் பொதுச் செயலாளருமான தீபா சென்னை காவல்துறை அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : இதுவரை என் மீது வன்மமான பேச்சுகள் பரப்பப்படுவதாக புகார் அளித்திருக்கிறேன் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த முறை ஆதாரத்துடன் புகார் அளித்திருக்கிறேன். என்னடைய முகநூல் பக்கத்திலேயே வந்து அறுவறுப்பான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
டிடிவி தினகரனின் ஆதரவாளர்களும் அவருடன் இருப்பவர்களுமே இவ்வாறான கருத்துகளை பதிவிட்டுள்ளனர். அதனை ஆதாரத்துடன் போலீசாரிடம் அளித்துள்ளேன்.
5 முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
கடந்த 6 மாதங்களாக என் மீதும், எனது ஆதரவாளர்கள் மீதும் போலீஸ் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன, அது ஏன் என்று கேட்டுள்ளேன். 6 மாதத்திற்கு முன் போயஸ் கார்டனில் அடைத்து வைத்து என்னை துன்புறுத்த நினைத்தார்கள், அது குறித்து போலீசாரிடம் 5 புகார் அளித்திருக்கிறேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சமூக வலைதளத்தில் அச்சுறுத்தல்
என்னுடைய உயிருக்கும், சுதந்திரத்திற்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் இருப்பதால் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று காவல்துறையினரை சந்தித்து புகார் அளித்துள்ளேன். சமூக வலைதளங்களில் யார் வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் என்னுடைய முகநூல் பக்கத்திலேயே நேரில் வந்து ஆபாசமான கருத்துகளை பதிவிடுகின்றனர். திட்டமிட்டே இது செய்யப்படுவதால் தான் இப்போது புகார் அளித்துள்ளேன்.
ஆதாரம் ஒப்படைப்பு
நிறைய தொலைபேசி அழைப்புகளும், பதிவு செய்யப்பட்ட அழைப்புகளும் அச்சுறுத்தல்களாகவே இருக்கின்றன. அந்த ஆதாரங்களையும் அளித்துள்ளேன், ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு பெரிய நெட்வொர்க்காக செயல்படுகிறார்கள், அவர்கள் அனைவருமே சசிகலா மற்றும் தினகரனுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பில் இருப்பவர்கள் தான்.
சசி குடும்பத்தின் சதி
டிடிவி. தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினருக்கு மட்டுமே என் மீது வன்மம் இருக்கிறது. நான் நடத்தும் கூட்டத்தில் வன்முறையை தூண்ட நினைக்கிறார்கள், என் வீட்டின் மீது நடந்த தாக்குதலுக்கு என் வீட்டில் இருந்த ஆட்களையே பயன்படுத்தி இருக்கின்றனர். எனவே என்னை சுற்றி ஒரு சதி நடக்கிறது, இந்த எல்லா பின்புலத்திலும் இவர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. தினகரன், சசிகலாவிற்கு ஆதரவானவர்கள் என்பதால் சிலரை நான் பேரவையில் இருந்து நீக்கினேன். அது முதலே அவர்கள் எனக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் என்றும் தீபா தெரிவித்துள்ளார்.