ஜெ. சிலையை திறந்து வைத்த ஓபிஎஸ், ஈபிஎஸ் - களைகட்டிய 70வது பிறந்தநாள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
Recommended Video

சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் இன்று மாநிலம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்படுகிறது. அவரது முழு உருவச் சிலையும் இன்று சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய பெண் தலைவராக திகழ்ந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவர் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தார்.
1970 மற்றும் 80களில் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜெயலலிதா, பல்வேறு மொழிகளிலும் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரங்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.
எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியைத் தொடங்கி தமிழக முதல்வரானார். 1982 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.
1987ஆம் ஆண்டு எம்ஜிஆரின் மறைவிற்கு பின் கட்சி இரண்டாக பிரிந்தது. சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக சட்டசபைக்குள் அடியெடுத்து வைத்தார். எதிர்கட்சித்தலைவரானார்.

எதிர்கட்சித்தலைவராக ஜெயலலிதா
பிரிந்த கட்சியைத் தனது தலைமையின் கீழ் ஒன்றிணைத்து கட்சியின் பொதுச்செயலாளராக உருவெடுத்தார் ஜெயலலிதா. தமிழக சட்டசபை வரலாற்றில் 1989 மார்ச் 25 மறக்க முடியாத நாள். பட்ஜெட் உரையில் முதல்வர் கருணாநிதி - எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா இடையே கடும் விவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாறியது. திமுக அமைச்சரால் ஜெயலலிதா தாக்கப்பட்டார்.

முதல்வரான ஜெயலலிதா
அப்போது 'இனிமேல் நான் சட்டசபைக்கு வரும்போது முதல்வராகத்தான் வருவேன்' என சபதமேற்றார். அதன்படி 1991 ஜூன் 24ல் முதல்வராக பதவியேற்று சபதத்தை நிறைவேற்றினார். 5 ஆண்டுகால ஆட்சி மக்களிடம் அதிகம் வரவேற்பை பெறவில்லை. 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தது.

தனித்து போட்டி
சொத்துக்குவிப்பு வழக்கு, ஊழல் என பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்ட போதிலும், தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே மிகச்சிறந்த பெண் தலைவராக உருவெடுத்தார் ஜெயலலிதா. 2014ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றார்.

6வது முறையாக முதல்வர்
ஊழல் வழக்கில் இருந்து விடுதலை பெற்ற ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலையில் வேட்பாளர்களை நிறுத்தினார். மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று 6வது முறையாக முதல்வரானார். நாட்டின் பெண் முதல்வர்களில் நீண்டகாலம் பதவி வகித்தவர்கள் வரிசையில் ஜெயலலிதா இரண்டாவது இடத்தில் உள்ளார். ஜெயலலிதா முதலிடம் பெற வாய்ப்பிருந்தது. ஆனால் காலம் கைகொடுக்கவில்லை.

முதல்வராக மறைந்த ஜெயலலிதா
எம்ஜிஆருக்குப் பின்னர் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வென்று சரித்திர சாதனை படைத்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டார். அப்பல்லோவில் 75 நாட்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். பதவியில் இருக்கும் போதே மறைந்த முதல் பெண் முதல்வர் ஜெயலலிதா தான்.

70வது பிறந்தநாள்
சரித்திரத்தில் சாதனை படைத்த ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் பிப்ரவரி 24ஆம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கொண்டாடப்படுகிறது. அவரது முழு உருவ சிலை இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் இன்று திறந்து வைக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சிலையை திறந்து வைத்தனர்.

தொண்டர்கள் உற்சாகம்
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் களைகட்டியுள்ளது. தொண்டர்கள் குவிந்துள்ளனர். மகளிரணி தொண்டர்கள் நடனமாடி தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இரண்டு அணிகளும் இணைந்த பின்னர் கொண்டாடும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்பதால் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications