சென்னையில் ஜெயலலிதா, கருணாநிதியை சந்தித்தார் ஜெகன் மோகன் ரெட்டி
சென்னை:ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு தரக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை சென்னையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. இன்று சந்தித்துப் பேசினார்.
ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது, ஒருங்கிணைந்த ஆந்திராவே நீடிக்க வேண்டும், இதுதொடர்பாக அரசியல் சட்டத்தின் 3வது பிரிவை துஷ்பிரயோகம் செய்ய மத்திய அரசு முயலக் கூடாது என்பது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிலைப்பாடு

இந்தக் கோரிக்கை தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரையும் பாஜக மற்றும் இடதுசாரி தலைவர்களையும் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்துள்ளார்.
இதேபோல் தெலுங்கானா தனி மாநில மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கூடாது என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடமும் ஜெகன் மோகனும் அவரது கட்சியினரும் நேரில் வலியுறுத்தினர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஜெகன் மோகன் ரெட்டியும் அவரது கட்சி குழுவினரும் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் தெலுங்கானா தனி மாநில மசோதாவை நாடாளுமன்றத்தில் ஆதரிக்க வேண்டாம் என்றும் ஜெகன் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

கருணாநிதியுடன் சந்திப்பு
இந்த சந்திப்பைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியை ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்துப் பேசினார். அப்போது ஒருங்கிணைந்த ஆந்திரா கோரிக்கையை திமுக ஆதரிக்க வேண்டும் என்று கருணாநிதியிடம் ஜெகன் மோகன் ரெட்டி கேட்டுக் கொண்டார்.
500 பேனர்கள் அகற்றம்
முன்னதாக இன்று காலை ஜெகன் மோகன் வருகையையொட்டி சென்னை விமானம் நிலையம் முதல் ஜெகனின் சகோதர்ர் வீடு இருக்கும் போய்ஸ் தோட்டம் வரைக்கும் நகரம் முழுவதும் 500க்கும் அதிகமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் 2 பேனர்கள் மாணவர்கள் மீது விழுந்து காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து நகரம் முழுவதும் ஜெகன் மோகன் ரெட்டிக்காக வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றும் பணியில் சென்னை போலீசார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications