அலங்காநல்லூரில் பிப். 1 ல் ஜல்லிக்கட்டு - விழா கமிட்டி அறிவிப்பு
அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஊர் கமிட்டியினர் அறிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடைபெற போராடிய அனைவருக்கும் ஊர் கமிட்டியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
மதுரை: வாடி வாசல் திறக்காமல் வீடு வாசல் செல்லமாட்டோம் என்று கூறி கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக அலங்காநல்லூர் தொடங்கி சென்னை, நெல்லை வரை போராட்டம் நடைபெற்றது.
மாணவர்களின் போராட்டம் புரட்சியாக மாறி வெடிக்கவே, மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. சட்டசபையில் இன்று அவசர சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த நிலையில் போராட்டத்தை கைவிடுமாறு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் காட்சிப்படுத்தப்படாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.
எனினும் போராட்டக்குழுவினருடன் ஊர் பெரியவர்கள், போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் நிரந்தர சட்டம் கொண்டு வராவிட்டால் முதல்வர் பதவி விலகவேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கோவில் முன்பு ஊர் கமிட்டி கூடியது. அப்போது அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் விழா கமிட்டி முடிவு செய்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி தலைவர் சுந்தரராஜன் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடைபெற கடந்த 8 நாட்களாக போராடிய மாணவர்களின் பாதம் தொட்டு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். பிப்ரவரி 1ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேலரி அமைப்பது, டெபாசிட் செய்வது என அனைத்து செலவுகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். மாணவர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு காண வரவேண்டும். மாணவர்களுக்கு தனி கேலரி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் தலைவர் சுந்தரராஜன் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முடிவு எடுத்தாலும் அலங்காநல்லூரில் போராட்டம் நீடித்து வருகிறது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தாலும் போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை.












Click it and Unblock the Notifications