அலங்காநல்லூரைத் தொடர்ந்து பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு.. பிப். 2ம் தேதி!
மதுரை மாவட்டம் பாலமேட்டில் பிப்ரவரி 2ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அப்பகுதியின் ஊர் கமிட்டி தெரிவித்துள்ளது.
மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் வரிசையாக 3 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி 14ஆம்தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த சென்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. அதே போல 15ஆம் தேதி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்காததால் தெய்வக்குத்தம் ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டுமானால் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே பிரபலமான அலங்காநல்லூரில் கடந்த 16ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டு நடத்த முயன்றவர்கள் தடை செய்யப்பட்டனர். இதனையடுத்து போராட்டம் நடைபெற்றது.
அவசர சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஜனவரி 22ஆம் தேதியன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அரசு அறிவித்தது. ஆனால் போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை. இதனையடுத்து மக்கள் விரும்பும் போது ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறிவிட்டு சென்னை திரும்பினார்.
இதனிடையே அலங்காநல்லூரில் ஊர் கமிட்டி கூடி பிப்ரவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவித்தனர். இதே போல பாலமேட்டில் பிப்ரவரி 2ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று ஊர் கமிட்டி ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடக்க தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்றும் ஊர் கமிட்டி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், மாணவர்களுக்கு நன்றி என்றும் ஊர் கமிட்டி சார்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் பாலமேடு ஜல்லிக்கட்டு நடந்த பின்னர் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடந்த பின்னர் பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications