ஜல்லிக்கட்டு.. ஜன.3ல் அலங்காநல்லூரில் திமுக ஆர்ப்பாட்டம்.. அனைத்து கட்சியினருக்கும் ஸ்டாலின் அழைப்பு
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி அலங்காநல்லூரில் ஜனவரி 3ல் திமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அலங்காநல்லூரில் ஜனவரி 3ல் திமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இப்போராட்டத்தில், அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்புவிடுத்தார். மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த முன்வர வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: 18-12-2015 அன்று எனது "முகநூல்" பக்கத்தில் விடுத்த அறிக்கையில், "பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு விளையாட்டிற்குள்ள தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், கலைஞரின் அனுமதி பெற்று நானே தலைமை தாங்கிப் போராட்டம் நடத்துவேன்" என்று தெரிவித்திருந்தேன்.

உண்ணாவிரத முடிவு
அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 28-12-2015 அன்று ஜல்லிக்கட்டு விழாவினை ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வந்த அலங்காநல்லூரில் உண்ணாவிரதம் மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதிலே அனைத்துக் கட்சியினரும் பங்கு பெற வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டது. ஜல்லிக் கட்டு விளையாட்டை வலியுறுத்தி என் தலைமையில் மதுரையில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று 18-12-2015 அன்று தெரிவித்த பிறகு, 23ஆம் தேதியன்று தமிழக அரசின் சார்பில் இந்தியப் பிரதமருக்கு இதே கோரிக்கை பற்றி கடிதம் எழுதினார்கள்.

பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி
23-12-2015 அன்று தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் தொலைக் காட்சிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து, கழகத் தலைவர் கருணாநிதி அவர்கள் மத்திய அமைச்சருக்கு ஜல்லிக்கட்டு எவ்வித இடையூறுமின்றி நடைபெற பிரதமரைச் சந்தித்து தேவையான முயற்சிகளை உடனே மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தார்கள். அந்தக் கடிதத்திற்கு மத்திய இணை அமைச்சர் அன்றிரவே எழுதிய பதில் கடிதத்தில் ஜல்லிக் கட்டு விளையாட்டை நடத்த அனுமதி பெற்று விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

உண்ணாவிரதம் ஒத்தி வைப்பு
அந்தக் கடிதத்தின் மீது நம்பிக்கை வைத்தும், அப்போது தமிழகம் முழுவதும் பெய்த பெருமழை காரணமாகவும், செம்பரபாக்கம் ஏரி உரிய நேரத்தில் திறக்கப்படாமல் முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்ட காரணத்தாலும் 28-12-2015 அன்று அலங்காநல்லூரில் என் தலைமையில் நடத்துவதாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த உண்ணாவிரதத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கலாம் என்று கருணாநிதி அவர்கள் கூறினார்கள்.

ஜெயலலிதா கடிதம்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து மத்திய அரசு அவசர ஆணை பிறப்பித்த நிலையில், உச்ச நீதி மன்றம் அதற்கு திடீரென இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் மத்திய அரசு அறிவிக்கை மூலமாக ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்துவதற்கு ஆணை பிறப்பிக்காமல், அவசரச் சட்டத்தின் மூலமாக அறிவித்திருக்க வேண்டும்; அப்படி செய்திருந்தால் உச்ச நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்க முடியாது; எனவே இந்தக் கட்டத் திலாவது இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் உடனடியாக அவசரச் சட்டம் பிறப்பித்து ஜல்லிக்கட்டு விழாவினை நடத்திட வேண்டுமென்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டிருந்தார்.

கருணாநிதி கோரிக்கை
கருணாநிதி 12-1-2016 அன்று விடுத்த அறிக்கையில் பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, விலங்குகள் கொடுமைத் தடுப்புச் சட்டம் 1960இல் திருத்தம் கொண்டு வந்து அவசரச் சட்டம் ஒன்றினை பிறப்பித்து, ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்துவதற்கான அனுமதியினை வழங்க உதவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த ஆண்டு விளையாட்டு வேண்டும்
ஆனால் இவை எதுவுமே நடைபெறாமல், கடந்த ஆண்டு ஜல்லிக் கட்டு விளையாட்டினை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டிலாவது ஜல்லிக்கட்டு விளையாட்டினை தமிழகத்தில் நடத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டுமென்று கேட்டுக் கொள்ளத் தான் மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் வருகின்ற 3-1-2017 செவ்வாய்க்கிழமை ,காலை 10 மணியளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அனைவரும் பங்கேற்கலாம்
தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும், பொது அமைப்புகளைச் சார்ந்தோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். கழக உடன்பிறப்புகளும் என்னுடைய தலைமையிலே நடைபெறும் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற வேண்டு மென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் சிலை
முன்னதாக, பேஸ்புக் பதிவு ஒன்றில் ஸ்டாலின் கூறுகையில், "தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், தலைவர் கலைஞர் அவர்களின் பெருவிருப்பத்தை ஏற்றும் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் அய்யன் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த அம்மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திருவள்ளுவர் சிலை அமைக்க பெரும் முயற்சி எடுத்துக் கொண்ட பா.ஜ.க.,வின் முன்னாள் மேலவை உறுப்பினர் தருண் விஜய் அவர்களையும் பாராட்டி அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications