மெரீனாவில் கலைந்து செல்ல மறுக்கும் மாணவர்களை.. குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தியது போலீஸ்
மெரீனா கடற்கரையில் போராட்டத்தை கைவிட மாணவர்கள் மறுத்து வருவதால் காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரி வரலாறு காணாத அளவிற்கு தமிழகத்தில் மிகப்பெரிய புரட்சியை நடத்தியிருக்கின்றனர். அவசர சட்டம் நிறைவேற்றப்பட உள்ளதால் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.
இதைக் கேட்டு நெல்லையில் மட்டும் மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக கூறினர். ஆனால் மெரீனா கடற்கரை, அலங்காநல்லூர், மதுரை தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராடி வரும் மாணவர்கள் நிரந்தர சட்டம் நிறைவேற்றும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.
சில தினங்களில் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி கடற்கரை சாலையில்தான் நடைபெறும். எனவே போராட்டக்குழுவினரை வெளியேற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அனைவரும் கடல் அலை பகுதிக்குள் சென்று இணைந்து அரணாக நின்று கொண்டிருக்கின்றனர்.

காவல்துறையினர் கோரிக்கை
இன்று காலையில் கடற்கரைக்கு வந்த காவல்துறை அதிகாரி பாலகிருஷ்ணன், அவசர சட்ட முன்வடிவை அளித்தார். மாணவர்கள் மத்தியில் பேசிய பாலகிருஷ்ணன்,
போராட்டத்திற்கான குறிக்கோள் அடையப்பட்டுள்ளதால் கலைந்துசெல்லும்படி இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சட்டம், ஒழுங்கை பேணிக்காக்க அனைவரும் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு அளித்ததாக தெரிவித்தார்.
|
கலைந்து செல்ல மறுப்பு
உறங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் எழுந்து அமர்ந்து கலைந்து செல்ல மறுத்தனர். இன்று காலையிலேயே 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து தனித்தனியாக இருந்த போராட்டக்காரர்கள் பலரும் விவேகானந்தர் இல்லத்திற்கு எதிரே ஒரே இடத்தில் குவிந்தனர்.

வலுக்கட்டாயமாக வெளியேற்றம்
அனைவரும் மொத்தமாக கூடி நின்று கலைந்து செல்ல மறுத்தனர். இதனையடுத்து ஒன்றாக அமர்ந்த அனைவரும் இணைந்து கொண்டனர். இதனையடுத்து அனைவரையும் அஙகிருந்து போலீஸார் கலைத்தனர்.

குண்டு கட்டாக தூக்கினர்
போராட்டக்காரர்களை தனித்தனியாக பிரித்த போலீசார் ஒவ்வொருவரையும் இழுத்துச் சென்று வலுக்கட்டயமாக வெளியேற்றினர். அப்போது காவல்துறையினர் கால்களை பிடித்துக்கொண்டு மன்றாடினர். பலரும் நகர மறுக்கவே அனைவரையும் கட்டி தூக்கிச் சென்று போய் சாலைகளில் விட்டனர்.

பெண்கள் குழந்தைகள்
போராட்ட களத்தில் இருந்து வெளியேற மறுக்கும் பெண்கள், குழந்தைகளை பெண் போலீசார் வெளியேறச் சொல்லி கட்டாயப்படுத்தி வெளியேற்றி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள், மாணவர்கள் கடல் அலை பகுதிக்கு சென்றுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications