ஜல்லிக்கட்டு வன்முறை: சென்னையில் கைது செய்யப்பட்ட 21 பேருக்கு ஜாமீன்
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள 21 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக கைதான 21 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜல்லிக்கட்டு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் சென்னை மெரினாவில் ஒரு வாரகாலமாக போராட்டம் நடைபெற்று வந்தது. போராட்டத்தின் இறுதி நாளில் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையில் தீயணைப்பு துறைக்குச் சொந்தமான வாகனம், காவல்துறை வாகனம் மற்றும் டாஸ்மாக் கடை ஆகியவற்றை தீ வைத்து எரித்ததாக 21 பேர் மீது அரும்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எம்.நஷீர் அகமது முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர், 21 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மறு உத்தரவு வரும் வரை விசாரணை காவல் நிலையத்தில் நாள்தோறும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.