வாடிவாசல் திறக்கும் வரை வீடு வாசல் போகமாட்டோம், போராட்டமும் ஓயாது... மாணவர்கள் அறிவிப்பு
வாடிவாசல்கள் நிரந்தரமாக திறந்து ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப் பாயாமல் தங்களது போராட்டத்தை கைவிடவே முடியாது என போர்க்களத்தில் இருக்கும் மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
சென்னை: வாடிவாசல்களை திறந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தும் வரை தங்களது போராட்டத்தை கைவிட முடியாது என புரட்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
தமிழ் இனத்தின் வரலாற்றில் ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு உரிமையை மீட்பதற்கான மாபெரும் புரட்சியில் இறங்கியுள்ளனர். கடந்த 5 நாட்களாக தமிழகமே போர்க்கோலம் பூண்டுள்ளது.
சென்னை மெரினாவில் 3 லட்சம் இளைஞர்கள், மாணவர்கள் குடும்பங்களுடன் திரண்டுள்ளனர். மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் என அனைத்து நகரங்களிலும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக திரண்டுள்ளனர்.
அலங்காநல்லூரில் பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் வாடிவாசல் திறக்காத வரை வீடுவாசலுக்கு செல்லப் போவதில்லை என அறிவித்திருக்கின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வரைவு அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓரிருநாளில் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; தமிழகத்தில் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என டெல்லி செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
இருந்தபோதும் இதை ஏற்க மறுத்து வருகின்றனர் போராடும் மாணவர்கள். முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அறிவிப்பை நம்ப முடியாது; வாடிவாசலை திறக்காமல் நாங்கள் வீடுவாசலுக்கு திரும்பமாட்டோம்; ஜல்லிக்கட்டு காளைகள் நிரந்தரமாக வாடிவாசல்களில் சீறிப் பாய சட்டம் தேவை; பீட்டாவை தடை விதித்து ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேறாதவரை மெரினாவை விட்டு வெளியேற முடியாது என மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
இதேபோல் அலங்காநல்லூர், மதுரை உள்ளிட்ட போர்க்களங்களில் இருக்கும் மாணவர்களும் அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான புரட்சி எனும் பெருநெருப்பு இப்போதைக்கு ஓயப் போவதில்லை.