ஜல்லிக்கட்டுக்குத் தடை: ஜன.17ல் மதுரையில் வைகோ உண்ணாவிரதம்
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஜனவரி 17ம் தேதியன்று மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் ஒத்தகடையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 'தமிழர்களின் நாகரிகம் பண்பாட்டுக்கு அடையாளமாக விளங்கி வரும் ஜல்லிக்கட்டு, தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்ற கலாச்சார நிகழ்ச்சி ஆகும். 2011 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, விலங்குகளைக் காட்சிப் பொருள் ஆக்குவதற்குத் தடை விதித்த பட்டியலில் காளைகளையும் சேர்த்தது மிகத் தவறான, கண்டனத்திற்குரிய நடவடிக்கை ஆகும்.
நாடு முழுவதிலும், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான காளைகள், பசுக்கள், எருமை மாடுகள் இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன. மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் ஓட்டும்போது மாடுகள் மீது தார்க்குச்சிகளையும், குதிரைகள் மீது சவுக்குகளையும் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால், ஜல்லிக்கட்டுக் காளைகளைத் தமிழர்கள் தங்கள் வீடுகளில் செல்லப்பிள்ளைகளாகப் பாவித்து வளர்த்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டுப் போட்டியின் போதும் காளைகளுக்கு எந்தவிதமான துன்புறுத்தலும் நடைபெறுவது இல்லை. சில வேளைகளில் மாடு பிடி வீரர்களுக்குத்தான் காயம் ஏற்படும்.
இந்த அடிப்படையை உணராமல் மத்திய அரசு தடையைக் கொண்டு வந்தது. இந்தத் தடையை நீக்குவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள மாநில அரசும் தவறி விட்டது. இந்திய நாடாளுமன்றத்தில் 48 உறுப்பினர்களைக் கொண்டு இருக்கின்ற அதிமுக கடந்த 18 மாதங்களாக ஜல்லிக்கட்டுத் தடையை நீக்குவதற்கான முயற்சியை மேற்கொள்ளவே இல்லை.
காளைகளை காட்டுப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் சேர்த்த போது திமுக மவுனம் காத்தது. ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் கொண்டு வராததால் விவசாயிகளுக்கு இது வேதனை பொங்கல் என தெரிவித்த வைகோ, ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி ஜனவரி 17ம் தேதி மதுரையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.