மீனவர்களை இலங்கை பிடித்துச் செல்வதை இப்படியா வேடிக்கை பார்ப்பீங்க.. ஜெ. காட்டம்
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதம்...
பாக் ஜலசந்தியில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரிடம் சிக்கி அல்லலுறுவதை மிகுந்த மன வேதனையுடன் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
தமிழக மீனவர்களின் வாழ்க்கை நிலை பெரும் நெருக்கடியில் இருப்பது குறித்து உங்களுக்கு தொடர்ந்து நான் பலமுறை கடிதம் மூலம் தெரிவித்தும், தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்குவதும், கைது செய்வதும், கடத்திச் செல்வதும் தொடர்கதையாகியுள்ளது. தட்டிக்கேட்கப்படாமல் உள்ளது.
மத்திய அரசு பெரும் மெத்தனமாகவும், அமைதியாகவும், அக்கறையின்றியும் இருப்பதால் இலங்கைக் கடற்படையினரின் அடாவடி அதிகரித்தபடி உள்ளது. இதை மத்திய அரசு தீவிரமான ஒரு விஷயமாகவே எடுத்துக் கொள்ளாமல் மெத்தனமாக இருப்பது வருத்தம் தருகிறது.
இலங்கை சிறைகளில் பல்வேறு சம்பவங்களில் பிடித்துச் செல்லப்பட்ட 56 தமிழக மீனவர்கள் சித்திரவதைத்குள்ளாகி வருகின்றனர். 35 மீன்பிடி படகுகளை இலங்கைக் கடற்படை எடுத்துச் சென்று விட்டது. இப்படிப்பட்ட கொடுமையான நிகழ்வுகளால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து, வாடி வருகின்றனர். இதை உறுதியான வார்த்தைகளில் மத்திய அரசு கண்டித்தாக வேண்டும்.
இந்த விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து அமைதி காத்துக் கொண்டிருக்க முடியாது. இலங்கை கடற்படையின் அட்டகாசத்தைக் கண்டும் காணாமலும் இருக்க முடியாது.
இந்த விவகாரத்தில் நீங்கள் நேரடியாக தனிப்பட்ட முறையில் தலையிட்டு அனைத்து தூதரக வழிகளிலும் நடவடிக்கை எடுத்து தமிழகத்தைச் சேர்ந்த மொத்தம் 86 மீனவர்களை இலங்கை சிறையிலிருந்து மீட்கவும், 42 மீன்பிடி படகுகளைத் திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.