மெட்ரோ ரயில் கட்டணத்துக்கு காரணமே கருணாநிதி போட்ட ஒப்பந்தமே: முதல்வர் ஜெயலலிதா
சென்னை: மெட்ரோ ரயில்களின் கட்டணத்தை அந்நிறுவனமே நிர்ணயிக்கலாம் என ஒப்பந்தம் போட்டது கருணாநிதி என்று முதல்வர் ஜெயலலிதா சாடியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கை:
டெல்லி மெட்ரோ ரயில் கட்டணத்தை விட, சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் 250 சதவீத அளவு அதிகம் என்றும், தமிழக அரசும் மெட்ரோ நிறுவனமும் இணைந்து, மக்களின் செலவிடும் சக்தியை அறிந்து, மெட்ரோ ரயில் கட்டணங்களை குறைத்து அறிவித்திட வேண்டும் என்றும் உபதேசம் வழங்கியுள்ளார் கருணாநிதி.

மெட்ரோ நிறுவனம்தான்
சென்னை மெட்ரோ ரயில் கட்டணங்களை நிர்ணயிப்பது தமிழக அரசு அல்ல. இதனை நிர்ணயிப்பது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தான்.

ஒப்பந்தம் போட்ட கருணாநிதி
முதன் முறை அந்த நிறுவனம் தான் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும்; முதல் முறைக்கு பின்னர் கட்டணங்களை நிர்ணயிக்கும் அதிகாரம், சட்டப்படியாக ஏற்பாடு செய்யப்படும் ஒரு அமைப்பிடம் இருக்க வேண்டும் என்றும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட ஒப்புதல் அளித்தவரே கருணாநிதி தான்.

டெல்லி கட்டணம் கூடுகிறது
சென்னை மெட்ரோ ரயில் கட்டண விகிதம், மும்பை மெட்ரோ ரயில் கட்டண விகிதத்தைப் போன்றே அமைந்துள்ளது. டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனமும் தனது கட்டணத்தை விரைவில் உயர்த்த உத்தேசித்துள்ளது என்பதையும் கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அருகதையே இல்லை
அவ்வாறு உயர்த்தப்பட உள்ள அந்த கட்டணமும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டணத்தை ஒட்டியே இருக்கும். செலவுகளுக்கு ஏற்ப கட்டணம் மாற்றி அமைக்கப்படுவதை ஒரு தன்னிச்சையான அமைப்பு நிர்ணயம் செய்திட வேண்டும் என்பதோடு; அந்த அமைப்பே மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கும் கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற ஷரத்து அடங்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கிய கருணாநிதிக்கு, மெட்ரோ இரயில் கட்டணங்களை பற்றி பேசுவதற்கு எந்தவித அருகதையும் இல்லை.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications