மகத்தான வெற்றியே லட்சியம்… ஆர்.கே.நகரில் அனல் பறக்கும் பிரச்சாரம் தொடங்கினார் ஜெ
சென்னை: தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவதே தனது லட்சியம் என்று இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ஜெயலலிதா கூறினார்.
ஜூன் 27ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் ஜெயலலிதாவை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் ஆர்.கே.நகரில் இன்று பிரச்சாரத்தை துவங்கிய ஜெயலலிதா திருவொற்றியூரில் வாக்கு சேகரித்தார். பல்லாயிரக்கணக்கான தொண்டர்களிடையே பேசிய அவர், இந்த இடைத்தேர்தல் நீங்கள் விரும்பாத இடைத்தேர்தல் என்றார். அரசியல் சதி காரணமாக சில காலம் முதல்வர் பதவியை இழக்க நேரிட்டதாகவும் அவர் கூறினார்.
யாரையும் குறை சொல்லி வாக்கு சேகரிக்க வரவில்லை. எங்களின் சாதனைகளை கூறியே வாக்கு சேகரிக்க வந்துள்ளதாக கூறிய அவர், அதிமுக ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களால் நான் மக்களுக்காகவே நான்எனக்கு எல்லாமே நீங்கள்தான். உங்களின் எதிர்பார்ப்புகளை நான் பூர்த்தி செய்வேன். எனவே இந்த இடைத்தேர்தலை வரவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாக கொண்டு வாக்களியுங்கள்.
உங்களின் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். அண்ணா நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் நாமம் வாழ்க என்று கூறி முடித்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதா பிரச்சாரத்தை காண பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் ஆர்.கே.நகரில் குவிந்துள்ளனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications