நிச்சயம் தீர்ப்பு வரும்... தப்ப முடியாது ஜெயலலிதா... ஸ்டாலின் ஆவேசம்!
சென்னை: சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராகவே தீர்ப்பு வரும் என்றும், தண்டனையில் இருந்து அவர் தப்பிக்க வாய்ப்பேயில்லை என்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் விரைவில் துவங்கப்படாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 5 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணையும் விழா எஸ்.ஆர்.பி. டூல்ஸ் அருகில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா மேல்முறையீடு செய்துள்ள வழக்கில் விரைவில் தீர்ப்பு வர இருக்கிறது. நான் படித்த வரையில், சட்ட வல்லுனர்களிடம் நான் விசாரித்த வகையில் அவர் தண்டனையில் இருந்து தப்பிக்க வாய்ப்பில்லை என்றார்.

பெங்களூரு தீர்ப்பு
அரசு வக்கீலாக பவானிசிங் நீடிக்கக்கூடாது என்று பேராசிரியர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. ஒரு நீதிபதி பவானிசிங்கை நியமித்ததை செல்லும் என்றும் மற்றொரு நீதிபதி செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர். இருவரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி இருப்பதால் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. பவானிசிங் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டி உள்ளது. அதுவரை பெங்களூர் நீதிமன்றத்திலும் தீர்ப்பு வந்திட முடியாது.

திமுக ஆட்சி
அந்த தீர்ப்பு எப்படி வருகிறதோ தெரியாது. ஆனால் தமிழக மக்கள் வருகிற தேர்தலில் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். இங்கே 80 சதவீதத்துக்கு மேல் இளைஞர்கள் திரண்டு இருக்கிறீர்கள். இளைஞர்களுக்காக தொழில் புரட்சியை உருவாக்கியது தி.மு.க. ஆட்சி. அதற்கு இந்த பகுதியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்ளே சாட்சி. பொறியியல் நுழைவு தேர்வை ரத்து செய்து சாதாரண ஏழை வீட்டு பிள்ளைகளையும் பொறியாளர்கள் ஆக்கினோம்.

அதிமுக ஆட்சி
இன்று தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சி அல்ல காட்சி. முதல்வர் எப்படி இருக்கிறார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலையாக அமைச்சர்கள் பூஜைகள், பால் குடம் எடுத்தல், மண்சோறு சாப்பிடுவது என்றெல்லாம் செய்கிறார்கள். ஆனால் மக்களை பற்றி சிந்திக்கவில்லை. ஆந்திர ஹைகோர்ட்டு தலைமை நீதிபதி வகேலாவை இடமாற்றம் செய்து விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு உத்தரவு பிறப்பிக்கிறார்கள் காரணம் என்ன? சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தப்பிக்க போடும் சதிதான்.

ஆட்சி மாற்றம்
பதவி வெறி பிடித்து ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. நான் பார்க்காத பதவியா? நாட்டு மக்களுக்காக, விவசாயிகளுக்காக, ஏழை எளியவர்களுக்காக, ஒட்டு மொத்த தமிழக மக்களின் நலனுக்காக ஆட்சி மாற்றம் வரவேண்டும். தி.மு.க. எத்தனையோ முறை வெற்றி பெற்றுள்ளது. எத்தனையோ முறை தோல்வி அடைந்துள்ளது. இவ்வளவு வெற்றி, தோல்வியை சந்தித்த கட்சியை நாட்டில் பார்த்து இருக்க முடியாது.

தமிழர்கள் கொலை
ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கலைஞர் உள்பட அத்தனை பேரும் கண்டித்தார்கள். ஆனால் முதல்வர் கண்டித்தாரா? மக்களின் முதல்வர் என்று கூறிக்கொள்ளும் அம்மையார்தான் கண்டித்தாரா? மூன்று நாட்களுக்கு பிறகு மெல்லிய முறையில் ஒரு அறிக்கை விட்டார்கள். அதற்கும் காரணம் உண்டு. சொத்துக் குவிப்பு வழக்கில் ஹைதராபாத் திராட்சை தோட்டமும் சாட்சி. எனவேதான் தமிழர்களுக்காக பேசும் தைரியம் இல்லை.

சிறைநிரப்புவோம்
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்களை கொண்டு வந்தோம். மெட்ரோ ரயில் திட்டத்தையும் கொண்டு வந்தோம். அதிலும் மந்தமான நிலை. ஓரிரு பகுதிகள் பணி முடிந்து விட்டதாக தகவல். அம்மையார் வழக்கில் இருந்து விடுதலை ஆவதற்காக அந்த வழித்தடங்களை திறக்காமல் உள்ளார்கள்.
மெட்ரோ ரயில் திட்ட பணிகளை உடனடியாக முடிக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். அது காலையில் கைதாகி மாலையில் விடுதலையாவதாக இருக்காது. சிறை நிரப்பும் போராட்டமாக இருக்கும் என்பதை ஒரு எச்சரிக்கையாக விடுக்கிறேன் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications