''Half century'': 2 தவணையாக மொத்தமாக சிறையில் 50 நாட்கள்... ஜெயலலிதாவின் சாதனை!
சென்னை: இதுவரை 2 முறை சிறைவாசத்தை அனுபவித்துள்ள ஜெயலலிதா, மொத்தமாக 50 நாட்களைப் பூர்த்தி செய்துள்ளார்.
ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, 50 நாட்கள் என்பது பெரிய விஷயமாக இருக்கலாம். ஆனால், மிகக் குறைந்த நாட்களுக்கு சிறைவாசத்தை அனுபவித்த தமிழகத்தின் அதி முக்கிய அரசியல் தலைவர் யார் என்றால் அது ஜெயலலிதாவாகத்தான் இருக்க முடியும்.
திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் இதற்கு மேற்பட்ட நாட்களை சிறையில் கழித்துள்ளனர்.
அதிலும் வைகோவெல்லாம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சிறைக்குப் போன வரலாறு படைத்தவர் ஆவார். இதே ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அவர் ஒரு வருடத்திற்கு மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது நினைவிருக்கலாம்.
ஜெயலலிதா முதல் முறையாக, 1996 ஆம் ஆண்டு கலர் டிவி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார். அப்போது மொத்தம் 28 நாட்கள் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது நடந்தது திமுக ஆட்சி. பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். பிறகு அந்த வழக்கிலிருந்தும் விடுதலையானார்.
இப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இன்றோடு சேர்த்து 22 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார் ஜெயலலிதா.
ஜெயிலுக்கே போகாத ஒரு "தலைவர்"!
தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர் இதுவரை ஜெயிலுக்கே போனதில்லை. அவர்தான் தேமுதிக தலைவர் விஜயகாந்த்!