மீனவர் படகுகளை விடுவிக்க முடியாது- ராஜபக்சே பேட்டிக்கு முதல்வர் ஜெ. கண்டனம்!
சென்னை: மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது என்ற இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கருத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது. அத்துடன் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து கொள்கிறது.

படகுகளை விடுவிக்க முடியாது- ராஜபக்சே
சில காலம் கழித்து மீனவர்களை மட்டும் விடுவிக்கும் இலங்கை அரசு, படகுகளை விடுவிக்க முடியாது என்று கூறி வருகிறது. இதே கருத்தை இந்து ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

ராஜபக்சேவுக்கு கண்டனம்
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அனுப்பியுள்ள கடிதத்தில், ராஜபக்சேவின் கருத்துக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பல முறை கடிதம்
முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கை:
தமிழக மீனவர்கள் பாக்ஜலசந்தியில் உள்ள தங்களது பாரம்பரியமான மீன் பிடிக்கும் பகுதிக்கு செல்லும் போதெல்லாம் இலங்கை கடற்படையினரால் தாக்கி கடத்தி செல்லப்படுவது பற்றி நீங்கள் கடந்த மே மாதம் பதவி ஏற்றதிலிருந்து பல தடவை உங்களுக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன்.

ராமநாதபுரம் மாவட்டத்துக்குரியது
கச்சத்தீவும் அதனை சுற்றிய பகுதிகளும் ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதிதான். அதனை இலங்கைக்குத் தாரை வார்த்தது சட்ட விரோதமானது. என்றும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

மீண்டும் தாக்குதல்
சிறிது இடைவெளிக்கு பிறகு இலங்கை மீண்டும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தொடங்கி உள்ளது.

3 முறை கைது
கடைசியாக இது தொடர்பாக உங்களுக்கு நான் கடிதம் எழுதிய பிறகு தமிழக மீனவர்கள் கடத்தி செல்லப்படுவது 3 தடவை நடந்துள்ளது.

அடுத்தடுத்து....
கடந்த 10-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து 6 படகுகளில் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க சென்ற 30 மீனவர்கள் கடத்தி தலைமன்னாருக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மற்றொரு சம்பவத்தில் நாகப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 23 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடத்தப்பட் டுள்ளனர்.
3-வது சம்பவமாக தஞ்சை மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றிருந்த 4 மீனவர்களை இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் சட்ட விரோதமாக கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று உள்ளனர்.
இந்த பிரச்சினையில் உங்களது அரசு மேற்கொள்ளும் சரியான அணுகுமுறைக்கு நான் ஏற்கனவே பாராட்டி உள்ளேன். உங்களது அதிகாரிகள் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட நமது மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகளில் சரியான முறையில் செயல்பட்டனர். என்றாலும் இலங்கையின் அணுகுமுறை மாறவில்லை.

கடும் போக்கை கடைபிடிக்கும் இலங்கை
அவர்கள் தொடர்ந்து கடுமையான போக்கையே கடைபிடிக்கிறார்கள். அப்பாவி தமிழக ஏழை மீனவர்களுக்கு நிரந்தரமாக பாதிப்பு ஏற்படும் வகையில் அவர்கள் தந்திரமாக செயல்படுகிறார்கள். இதுபற்றி நான் ஏற்கனவே உங்களுக்கு கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளேன்.

வாழ்வாதாரத்தை பாதிக்கும்
அவர்கள் தமிழக மீனவர்களை விடுவித்து இருந்தாலும் 64 படகுகளை இன்னும் விடுவிக்கவில்லை. இந்த போக்கு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக உள்ளது.

உறுதியான நடவடிக்கை அவசியம்
இந்த விவகாரத்தில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் தீர்வு காண முடியும். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்தால்தான் இதற்கு தீர்வு கிடைக்கும். இந்த தகவலை உயர்மட்ட அளவில் கொண்டு சென்று பேச வேண்டியது அவசியமாகும்.

ராஜபக்சேவுக்கு கண்டனம்
ஏனெனில் தமிழக மீனவர்களுக்கு எதிரான இந்த சதி திட்டம் இலங்கையின் உயர்மட்டத்தில் இருந்து தோன்றி இருப்பது தெரிய வந்துள்ளது. இன்று காலை வெளியான ஒரு நாளிதழில் இலங்கை அதிபர் கொடுத்துள்ள பேட்டியில் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க மாட்டோம் என்று கூறி இருப்பதிலிருந்து இது உறுதி ஆகி இருக்கிறது.

நிரந்தர தீர்வு
இந்த பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண நீண்ட கால முறையில் நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டியது உடனடி தேவை என்பதை உங்களுக்கு வலியுறுத்தி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஜூன் மாதம் 3-ந்தேதி நான் உங்களிடம் அளித்த மனுவில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளேன்.

ராமநாதபுரத்துக்கு சொந்தமானது..
கச்சத்தீவு பிரச்சினைதான் இந்த விவகாரத்தில் முதன்மையாக உள்ளது. கச்சத்தீவு ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது நான் ஏற்கனவே சுட்டிக்காட்டி உள்ளேன்.

தடுக்கப்படும் மீனவர்கள்..
இந்திய மீனவர்கள் கச்சத்தீவை சுற்றி உள்ள தங்களது பாரம்பரிய பகுதிகளில் மீன் பிடித்து வந்தனர். 1974 மற்றும் 1976 -ம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் காரணமாக கச்சத்தீவு சட்டவிரோதமாக தவறானபடி இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. அன்று முதல் தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே தங்கள் பாரம்பரிய பகுதியில் மீன் பிடிக்க முடியாதபடி தடுக்கப்பட்டு வருகிறார்கள்.

சட்டசபை தீர்மானம்
கச்சத்தீவு மீட்கக் கோரியும் அதை இந்தியாவின் ஒரு பகுதியாக அறிவிக்கக்கோரியும் 1991-ம் ஆண்டு முதலே வலியுறுத்தி வருகிறோம். தமிழக சட்டசபையிலும் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம்.

கச்சத்தீவு வழக்கு
இது தவிர நான் தனிப்பட்ட முறையில் சுப்ரீம்கோர்ட்டில் 2008-ம் ஆண்டு கச்சத்தீவை மீட்க கோரி ஒரு வழக்கு தொடர்ந்தேன். 2011-ம் ஆண்டு தமிழக அரசும் இந்த வழக்கோடு இணைந்துள்ளது.

பாரம்பரிய மீன்பிடி உரிமை அவசியம்
எனவே 1974 மற்றும் 1976-ம் ஆண்டு இலங்கையுடன் போடப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய பகுதிகளில் மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மிகவும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

50% மானிய கோரிக்கை
தமிழக மீனவர்களின் பிரச்சினை தீர்வு காண்பதற்காக மற்றொரு கருத்தையும் நாங்கள் முன் வைத்துள்ளோம். ஆழ்கடல் பகுதிக்கு சென்று மீன் பிடிப்பதற்கு வசதியாக பெரிய படகுகள் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் அளிக்க கோரியுள்ளோம்.
இதற்கு மிகப்பெரிய நிதி உதவியும், தொழில்நுட்ப ஆலோசனையும் தேவை. ஆனால் மத்திய அரசு இந்த கருத்தை பற்றி எந்த ஒப்புதலையும் தரவில்லை.

மீன் பதப்படுத்துதல் பூங்கா
இது தவிர தமிழக மீனவர்களுக்கு ரூ.1,520 கோடி செலவில் ஒருங்கிணைந்த சிறப்பு தொகுப்பூதிய திட்டம் பற்றி உங்களிடம் கூறியது நினைவு இருக்கலாம். இதில் 975 கோடி படகுகள் வாங்குவதற்கும் ரூ.80 கோடி நடுக்கடலில் மீன் பதப்படுத்தும் பூங்கா அமைப்பதற்கும் தேவை என்று கூறி இருந்தோம்.
மீன்பிடி துறைமுகங்களை பராமரிக்க ரூ. 10 கோடியும், 32 ஆயிரம் நாட்டு படகுகளை எந்திர படகுகளாக மாற்றவும் கோரிக்கை விடுத்து இருந்தோம்.

உடனடி நடவடிக்கை..
இலங்கையுடான தமிழக மீனவர்களை மீட்க சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க நீங்கள் உத்தரவிட வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்துகிறேன்.

உயர்நிலை அளவில் பேச வேண்டும்..
ஏழை இந்திய மீனவர்கள் விஷயத்தில் இலங்கை கடற்படை தொடர்ந்து கடுமையாக நடந்து கொள்வதை இலங்கை அரசுடன் உயர்மட்ட அளவில் தொடர்பு கொண்டு பேச வேண்டும்.

இந்தியா–இலங்கை மீனவர் கூட்டு நடவடிக்கை குழு
சமீபத்தில் டெல்லியில் நடந்த இந்தியா-இலங்கை மீனவர் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுப்படி பயனுள்ள தீர்வு காண வேண்டும். அதற்கு முன்பாக நிரந்தர தீர்வாக கச்சத்தீவு பிரச்சினையை நீண்ட கால பிரச்சினையாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர் பிரச்சனை முன்னுரிமை
பக்கத்து நாட்டுடனான பிரச்சினையை தீர்ப்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு மீனவர் பிரச்சினையில் முன்னுரிமை அளித்து கடத்தப்பட்ட 78 மீனவர்களையும் 72 படகுகளையும் உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தமது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications