ஜெயலலிதாவுக்கு ரூ.4,000 கோடி ஊழல் சொத்து உள்ளது: கருணாநிதி
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் சொத்து இருப்பதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கூறியதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி, பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"இரட்டை இலை" சின்னங்களை சிறிய பேருந்துகள் போன்றவற்றில் மறைக்கப்பட வேண்டுமென்று பொருளாளர் மு.க. ஸ்டாலின் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றம் இன்றைய தினம் தீர்ப்பு அளித்திருப்பதைப் பற்றி?
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம். நீதிமன்றத் தீர்ப்புக்கு தலை வணங்கி அனைவரும் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக தேர்தல் ஆணையம் ஜனநாயகம் ரீதியில் நடைபெறுகிறது என்பதற்கு அடையாளமாக, ஏற்கனவே இந்த "இரட்டை இலை" சின்னங்களை மறைக்க வேண்டுமென்று கூறியிருந்தது. அந்தத் தீர்ப்பை மதித்து கட்சி சின்னங்களை, அரசு சார்புடைய எந்த நிகழ்விலும், அறிமுகப்படுத்தக் கூடாது, பயன்படுத்தக் கூடாது என்பதை நானும் கண்டிப்பாக எடுத்துக் கூற விரும்புகிறேன். இது தான் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பாகவும் அமைந்திருக்கிறது.
ஜெயலலிதா நான்காயிரம் கோடி ரூபாய்க்குச் சொத்து சேர்த்திருப்பதாக நேற்றைய தினம் பெங்களூரில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறாரே?
இந்தச் செய்தி பத்திரிகைகளில் வந்திருக்கிறது. பத்திரிகைகள் என்றால், அனைத்துப் பத்திரிகைகளிலும் அல்ல. ஏறத்தாழ நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் சொத்து ஜெயலலிதா தரப்பினரிடம் இருப்பதாக நேற்றைய தினம் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் எடுத்துத் தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்திப் பற்றி தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் குறிப்பாக சென்னையிலிருந்து வெளிவருகின்ற பத்திரிகைகள், நடுநிலை ஏடுகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிற பத்திரிகைகள் வெளியிடவில்லை. இதற்கு என்ன காரணம்?