அம்மாவுக்கு பிசியோதெரபி, நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது: சி.ஆர். சரஸ்வதி
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி மற்றும் நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் 40 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இது குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஜெயலலிதா
முதல்வர் நலமாக உள்ளார். அவர் மிக விரைவில் வீடு திரும்புவார் என்று கூறியுள்ளனர். அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
சிகிச்சை
ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி மற்றும் நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நடக்க உள்ள புதுச்சேரி உள்ளிட்ட 4 தொகுதிகளில் அமைச்சர்கள் எங்கெங்கு பிரச்சாரம் செய்வார்கள் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நட்சத்திர பேச்சாளர்கள்
நட்சத்திர பேச்சாளர்கள் எந்தெந்த தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என ஜெயலலிதா உத்தரவிட்ட பிறகு நாங்கள் அங்கு சென்று வாக்கு சேகரிப்போம். 4 தொகுதிகளிலும் அதிமுக மாபெரும் வெற்றி அடையும். அதை மக்கள் சாத்தியமாக்குவார்கள் என்றார் சரஸ்வதி.
பிரார்த்தனை
ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி அப்பல்லோ மருத்துவமனை வாசலில் தினமும் பலர் பிரார்த்தனை செய்கிறார்கள். இந்நிலையில் நேற்று அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில் சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது.