ஜெயலலிதா ஊர், ஊராகச் சென்று பொய் சொல்கிறார்: திருமாவளவன் தாக்கு
திருவள்ளூர்: 3 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா மாநிலம் முழுவதும் பொய் சொல்லி வருகிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் ரவிக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று பிரச்சாரம் செய்தார். மாதவரம், புழல், ஆதம்பாக்கம், மாதர்பாக்கம் போன்ற இடங்களில் திறந்த வேனில் வாக்கு சேகரித்த அவர் ஊத்துக்கோட்டை அருகே கூடிய மக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
மோடி
மதவெறியை கொள்கையாக கொண்டவர் மோடி. அவர் குஜராத் மாநிலம் கோத்ராவில் மத கலவரத்தை தூண்டிவிட்டு 2 ஆயிரம் அப்பாவி முஸ்லிம் மக்களை கொன்றார். அதனால் தான் அவருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்தது. இது ஒரு வெட்கக்கேடான விஷயம் ஆகும். வேறு எந்த மாநில முதல்வருக்கும் இப்படி ஒரு கெட்டப்பெயர் இல்லை.
நாடு
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் மோடி பிரதமர் ஆனால் நாடு பிளவுபடும் என்பதில் சந்தேகமே இல்லை. அதனால் அனைவரும் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள்
மதவாத சக்திகளை ஒடுக்க வேண்டும் என்பதற்காகவே துவங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றுமே நாட்டின் ஸ்திரத்தன்மைக்காக பாடுபடும். அதனாலேயே திமுக தலைவர் கருணாநிதி எங்களுடன் கூட்டணி வைத்து 2 தொகுதிகளையும் கொடுத்துள்ளார். எங்கள் வேட்பாளர் ரவிக்குமாரை வெற்றி பெறச் செய்தால் இந்த தொகுதியில் ரூ.1,000 கோடி முதலீடுகளை ஏற்படுத்தி தொழிற்சாலைகளை அமைப்பார். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்.
ஜெயலலிதா
கடந்த 3 ஆண்டுகளில் தங்கள் அரசு பல்வேறு சாதனைகள் செய்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா மாநிலம் முழுவதும் பொய் கூறி வருகிறார். அதை யாரும் நம்ப வேண்டாம். எப்போதும் இல்லாத அளவுக்கு மின்வெட்டு, பஸ் கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவை தான் ஜெயலலிதாவின் சாதனைகள். குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்க வேண்டிய நிலை உள்ளது. ஏழை, நடுத்தர மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ள ஜெயலலிதா அரசை தூக்கி எறிய நாடாளுமன்ற தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பு என்றார்.